பதறிய மனது பாழ்

இலக்கியம் கவிதைகள் (All)

பதறிய மனது பாழ்

ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க

ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு !

அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை

பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் !

அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே

அல்லல்படும் மனிதா அறிந்திடு !

பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி

அருளாளன் பாதையை மறவாதே !

ஒரு நாளில் பல நாளாய் செயல்பட்டே நீயும்

புதுநாளை வரவேற்க புறப்படு !

திருவான இறைவனை தினமும்நீ தொழுது

மறுவாழ்வுக்கு நன்மை குவித்திடு !

கல்வியும் ஒழுக்கமும் கலந்திட என்றும்,

பல்வினை உன்னையே பற்றாது !

பசிக்கு உணவையும் பாசத்தில் பரிவையும்

தவிக்கும் மக்களுக்கு தந்திடு !

சிந்தித்து எதிலும் செயல்படுதல் வரும்

நிந்தனையை தடுக்கும் நிமிர்ந்து !

பந்தலுக்கு மூங்கில் காலாகும், வாய்ப்

பந்தலுக்கோ மனமே பயிராகும் !

உதவிய உள்ளத்தை உடைத்தே, வார்த்தை

கதவினை திறப்பதா கனிவு?

நம்பிக் கடன்கேட்டு நாணயத்தை பெற்று

நாநயம் பிறழ்வது நயமா?

சிதறிய தேங்காயும் நல்லுணரவுக் குதவும்

பதறிய மனதோ பாழ் !

                                பொன்னகரம், கவிஞர். எம். சுல்தான்.

                                                     சென்னை – 21

( சம உரிமை  – மே 2010 இதழிலிருந்து )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *