ஏழையின் சிரிப்பில்…!

கவிதைகள் (All)

அனைத்துப் புகழுக்கும்
நன்றிக்கும் உரியவனே
யா அல்லாஹ்!
எச்சில் வாயாலா
உனைப் புகழ்வது?

பன்மடங்கு
புண்ணியமளிக்கும்
ரமதானை
எமக்குக்
கடமையாக்கினாய்!

உன் அடியாரின்
நல்வினைகட்கு
உன் வற்றாத
அருட்கொடையால்
நிறையாக்கினாய்!

பசியறியா திருந்தோரையும்
பசியுணர வைத்தாய்!
பசித்திருந்தோரையும்
நிறைவாய்ப்
புசிக்க வைத்தாய்!

ஈகையையும் மார்க்கவரியையும்
கட்டாயமாக்கி
இருப்போரைக் கொடுக்கவைத்தும்
இல்லாதோரைப் பெறவைத்தும்
களிப்பளித்தாய்!

ரமதானை
எமக்களித்து
வையத்தில்
நல் அறத்தைத்
தழைக்க வைத்தாய்!

‘ஈகைத் திருநாள்’ மூலம்
ஏழையின் சிரிப்பில்
உனைக் காணவைத்த
எம் இறைவா!
அகிலத்தின் புகழனைத்தும் உனக்கே!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *