காவிரி குடிநீர் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
முதுகுளத்தூர் வட்டம் முத்துராமலிங்கபுரம்பட்டியைச் சேர்ந்த மக்கள் திங்கள்கிழமை காலி குடத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முதுகுளத்தூர் அருகே செல்லூர் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பட்டிக்கு காவிரி குடிநீர் சரிவர வருவதில்லையாம். இதையடுத்து கிராமத்தினர் 200க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலி குடங்களுடன் திங்கள்கிழமை ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர். அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். வட்டாட்சியர் கே.கே.கோவிந்தன், காவல் துணைக் கண்காணிப்பாளர் கணபதி, சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கிராம மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாள்களுக்குள் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.