நாம் உணர்ந்து செயற்படுவோம் !
நாம் உணர்ந்து செயற்படுவோம் !
****************************
[ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ]
பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை
பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை
பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால்
பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !
இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது
இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது
நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால்
நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !
விஞ்ஞானம் எனச்சொல்லி விவரீதம் வந்திருக்கு
விளைச்சிலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை
பொய்யில்லா வகையினிலே விளைச்சல்கண்ட பூமியெலாம்
பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !
காய்கறியைப் பெருக்குதற்கு கண்டுவிட்ட விஞ்ஞானம்
காய்பெருக்க வைத்துவிட்டு கால்பறித்து நிற்கிறதே
நோய்நொடிகள் பலதந்து நொய்யும்படி செய்யுமிந்த
வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !
நாகரிகம் எனும்பெயரால் நம்வீட்டில் புகுந்துவிட்ட
நாமறியா உணவுவெல்லாம் நம்முள்ளே செல்கிறது
சென்றுவிட்ட உணவெல்லாம் சீரிழக்கச் செய்துநின்று
குன்றிவிடச் செய்வதனை என்றுதான் உணருவதோ !
பலகடைகள் பலவுணவு பல்வேறு வடிவங்களில்
பாங்காக வலம்வந்து பலரையுமே மயக்கிறதே
நலன்பற்றி நினையாமல் நயம்பற்றி எண்ணுவதால்
நலன்கெட்டு போவதற்கு நாமுடந்தை ஆகுகின்றோம் !
பண்டிகைகள் வந்துவிட்டால் பட்சணங்கள் செய்திடுவார்
பட்சணங்கள் அத்தனையும் பக்குவமாய் அமைந்திருக்கும்
இப்போது பட்சணங்கள் எத்தனையோ வருகிறது
அத்தனையும் ரசாயான கலவையாய் அமைகிறதே !
கூழ்குடித்தோம் மோர்குடித்தோம் குடல்நோய்கள் வரவில்லை
பழஞ்சோற்றை உண்டாலும் பழுதெம்மை அண்டவில்லை
விலைகொடுத்து பலவற்றை விருந்தெனவே உண்ணுகின்றோம்
மறுநாளே வைத்தியரை வலம்வந்து நிற்கின்றோம் !
நெல்லரிசிச் சோறுண்ண நிம்மதியே இல்லையென்று
வெள்ளைநிற உணவெல்லாம் வீட்டில்வாங்கி வைக்கின்றோம்
நல்லதெல்லாம் மாட்டுக்கு நாம்கொடுத்து விட்டுநிதம்
பொல்லாத உணவையெல்யாம் பொறுக்கிவைத்து உண்ணுகின்றோம் !
உயிர்ச்சத்து அத்தனையும் உதறிவிட்ட உணவுகளை
உயர்வாக எண்ணிநிதம் ஒழுங்காக உண்ணுகின்றோம்
நோய்வந்த பின்னாலே நூறுமுறை அழுகின்றோம்
யார்வந்து சொன்னாலும் நம்குணமோ மாறவில்லை !
பாட்டிதந்த உணவெல்லாம் பறக்கவிட்டு விட்டதனால்
பருவம்வரும் முன்னாலே பலநோய்கள் வருகிறதே
நாட்டார்கள் காட்டார்கள் காட்டிவைத்தை முறையாவும்
நம்வாழ்வை வளம்படுத்தும் என்பதனை மறந்துவிட்டோம் !
பழமையென்னும் அத்திவாரம் பலமளிக்கும் என்பதனை
உணருகின்ற நிலையெம்முள் உருவாகி வரவேண்டும்
விஞ்ஞானம் நாகரிகம் விந்தைபல செய்தாலும்
நம்வாழ்வில் அதன்பெருக்கை நாமுணர்ந்து செயற்படுவோம் !
Tags: உணர்ந்து