மருத்துவம்

நோய்களை உருவாக்கும் ‘நான் ஸ்டிக்’ பாத்திரங்கள்!

மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.

ஒட்டவே ஒட்டாது

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்வதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டுவதில்லை. எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. இது உடலின் கொழுப்பைச் சத்தை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் சமையல் செய்து உண்பது குறித்து வர்ஜீனியா பல்கலைக் கழக ஆய்வாளர் ஸ்டெபானியா பிரிஸ்பீ தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டனர். அதில் நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் பேப்ரிக்குகளும், உணவில் கொழுப்பு சத்தினை அதிகரிக்கச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கொழுப்பு சத்து அதிகரிக்கும்

உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களில் பூசப்படும் திரவம் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பி.எப் ஒ ஏ ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) என்ற வேதிப்பொருள் நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்களின் தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவதில்லை. எனவே இந்தவகை பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. மேலும் லிபோபுரோட்டீனின் அளவை குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

விலை கொடுத்து வாங்கப்படும் நோய்கள்

மேலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதிகமாக உபயோகிக்கும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பிஎப்ஒஏ எனப்படும் ( பெர் ஃப்ளோரா ஆக்டானிக் ஆசிட்) அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து மெனோபாஸ் விரைவில் நிகழ முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. அழகுக்கு ஆசைப்பட்டு அனைவரும் நோயை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதை படிக்கும் பலருக்கும் மறுபடியும் மண் சட்டி சமையலுக்கே திரும்ப வேண்டும் என்று ஆசை வருவது நியாயம்தான்.

Source : http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/are-nonstick-pans-dangerous-aid0174.html

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button