துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா !

வளைகுடா

துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா !

துபாய் :
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தலும் ,
கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவும் , அமீரக தி.மு.க. பொறுப்பாளரும் , தமிழ்நாடு அரசு
அயலக அணி உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான் அவர்களின் ஏற்பாட்டில்
வெகு விமர்சையாக கொண்டாட பட்டது.

விழாவிற்கு தாயகத்திலிருந்து , தி.மு.க. மாணவரணி தலைவர். வழக்கறிஞர்.இரா. ராஜீவ் காந்தி அவர்களும் , எழுத்தாளர், தி.மு.க.
ரைடர்ஸ் ஒருங்கிணைப்பாளர் அ.ராசா தமிழ் மாறன் அவர்களும் , அயலக தமிழர்கள் நலவாரிய உறுப்பினரும் ,
சிங்கப்பூர் தொழிலதிபருமான இராம். வெங்கட் ரமணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய மாணவர் அணித் தலைவர் இராஜீவ் காந்தி அவர்கள் ; உலகிலேய ஒருவன் என்னைப் பார்த்து , நீ இந்த சாதி என்று என் சாதியைச் சொல்லி நீ இழி பிறவி என்றால் , கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் என்னால் அவனை வெல்லவே முடியாது.
இந்த நேரத்தில்தான் சமூகநீதி எனும் ஆயுதத்தை தந்தைப் பெரியார் கொண்டு வந்தார். அதைப் பேரறிஞர் அண்ணா இறுகப் பற்றிக் கொண்டார். இருவரும் பேசிச் சென்றார்கள். ஆனால் , தந்தை பெரியார் கண்ட கனவை , பேரறிஞர் அண்ணா கண்ட கனவை ,
தன் வாழ்நாள் முழுக்க சமூகநீதி தளத்தில் நின்று செய்து செய்து யாரைப் பார்த்து தாழ்ந்தவன் என சொன்னாய் இதோ பார் நிமிர்ந்து நிற்கிறேன் என நம் தோள்கள் சொல்கிறதென்றால் … அந்தப் பெருமை யெல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரையே சாரும்.
ஒரு அரசியல்வாதி தன் மொழிக்காய் தன் வாழ் முழுக்க முழங்கினான் என்றால் , உலகத்திலேயே கலைஞரைத்
தவிர , வேறு யாருமே இருக்க முடியாது. ‘ தமிழ் வெல்லும் ‘ என சொன்ன அந்தக் கலைஞருக்குத்தான் நாம் இன்று
நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்று , கலைஞரை நினைவு கூர்ந்தார்.

எழுத்தாளர். அ.ராசா தமிழ் மாறன் பேசும் போது , சினிமாவைப் போல் கொஞ்சம் பின்னோக்கி நினைத்துப் பாருங்களேன்.
ஒரு வேளை கலைஞர் இல்லாமல் இருந்திருந்தால் , நம் மீது இந்தி கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கும்.
நம் தாய்த் தமிழ் புறக்கணிக்கப் பட்டிருக்கும். நாம் நம் இன அடையாளத்தைத் தொலைத்திருப்போம்
முகவரி தொலைந்தவர்களாய் வாழ்ந்து கொண்டிருப்போம். அதை மீட்டெடுத்து கொடுத்த கலைஞருக்கு இன்று நாம் நன்றி கூறுகிறோம் , என்றார்.

எழுத்தாளரும் , கவிஞருமான சசிகுமார் பேசும் போது கலைஞரின் சொல்லாடல் பற்றியும் கலைஞர் தன் வெற்றி , தோல்வி யாவற்றிலும் கலங்காது நின்று மக்கள் பணியாற்றினார் என்றும் , இன்று , கலைஞருக்கு நினைவு நாள்
என்கின்றனர். தலைவா ! உன்னை மறந்தால் அல்லவா நினைக்க … நீ எம்போதும் எங்களுடனே இருக்கின்றாயே … என்று ,
தன் கவிதை வரிகளால் கலைஞருக்கு புகழாரம் சூட்டினார்.

மர்யம் கபீர் பேசும் போது ; கலைஞரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் போராடும் அந்தக் குணம். ஆரிய மாயையை வீழ்த்த வந்த
கலைஞர் என்றும் சாகா வரம் பெற்றவர் என்று , தன் அழகு தமிழ் சொல்லாடலால் கலைஞரை புகழுரைத்தார்.

எழுத்தாளர் ஜெஸிலா பானு பேசும் போது : தலைவர் கலைஞரைப் பற்றி சொல்வதாக இருந்தால் ,
இன்னும் இன்னும் நிரம்ப சொல்லலாம் என்றாலும் , எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் அன்றே கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு உண்டு என்று , சட்டம் கொண்டு வந்தார். அந்த ஒன்றுக்காகவே கலைஞரை எவ்வளவு புகழ்தாலும் தகும் என்றார்.

டயானா பேசும் போது , 13 வயதில் நான் எப்படி இருந்தேன் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் , நம் கலைஞர் அவர்களோ
தன் 13 ஆம் வயதிலேயே மக்களுக்காய் களம் கண்டுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே
எனக்குப் பெருமை என்றார்.

கலைஞர் இல்லை. இனி , தி.மு.க. இல்லை என்றவர்கள். இன்று ,கலைஞர் இட்ட அந்த பாதையில் , அடிபிசகாமல்
அதே ஆற்றலுடன் நம் தளபதி ஆட்சி நடத்துவதைக் கண்டு எதிர் கட்சியினரே வியந்து பார்க்கின்றனர்.
கலைஞரின் குறும்பு , கிண்டல் , திறமை யாவும் ஒருங்கே பெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல் பாட்டைக்
கண்டவர்கள் இன்று சொல்கிறார்கள்.
தி.மு.க.வை இன்னும் 50 வருடத்திற்கு யாரும் அசைத்துக் கூட பார்க்க முடியாது என்கின்றனர். யாவும் , நம் முத்தமிழறிஞர் கலைஞர் இட்ட அந்த விதைதான் என்று , விழாவில் பேசியவர்கள் புகழாரம் சூட்டினர்.

விழாவில் , பாலா , பாண்டியன், பருத்தி இக்பால்,
முடவன் பசீர், கௌஸ் அலி, மீரான் மைதீன் ,
ஷா, இஸ்மாயில் , ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் , அன்பு , பன்னீர் செல்வம், செந்தில் பிரபு, ஜெயசந்திரன், ஜெகுபர் சாதிக் மற்றும் ,தி.மு.கழக உடன் பிறப்புகள் , தோழமை கட்சி சகோதரர்கள் யாவரும் திரளாக வந்திருந்து நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர்.

ஆசிப் மீரான் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். விழா முடிவில் அமீரக தி.மு.கழக பொறுப்பாளரும்,
தமிழ் நாடு அரசின் அயலக அணி உறுப்பினருமான எஸ்எஸ்_மீரான் அவர்கள் நன்றி உரைத்தார்
விழா இனிதே முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *