தியாகமே ஹிஜ்ரத்

இலக்கியம் கவிதைகள் (All) முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி அல்ஹாஜ் ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ

 

(முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)

 

ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி

அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி

தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத்

தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !

 

தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல்

தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து

எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் !

இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !

 

மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து

மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு

முக்காலம் விளைகின்ற வாழையடி வாழையென

முப்போகம் விளைவிக்கச் சென்றதுதான் ஹிஜ்ரத்தாம் !

 

பக்கத்துத் தாயிபிலே போட்டவிதை முளைக்கவில்லை !

பாவிகளின் நெஞ்சுக்குப் பாய்ச்சிய நீர் சேரவில்லை !

விக்கித்துப் போகாமல் வேதனையில் வாடாமல்

வேகமுள்ள ஹிஜ்ரத்தால் விவசாயம் செய்தனரே !

 

மரம் வெட்டிப் போட்டாலும் சமையலுக்கு விறகாகும் !

மெழுகுதனை எரித்தாலும் மேலுருகி வெளிச்சந்தரும் !

தரைபோட்டுத் தேய்த்தாலும் சந்தனமோ வாசந்தரும் !

திருநபிக்குத் தரும்துன்பம் திரும்பினாலும் இன்பந்தரும் !

 

விரல் பறித்த மலர் கூட வஞ்சமின்றி வாசந்தரும் !

வெட்டியமண் விழிதிறந்து ஊற்றெடுத்து நீரைத்தரும் !

தரங்கெட்டு ஊர் துறக்க வைத்தவரின் வாழ்வுக்கோ

தாஹா ரசூல் ஹிஜ்ரத்தோ தண்டனையாய் அன்பைத்தரும் !!

 

தாய்மைக்குத் தத்துவமே தன்சேயைச் சுமப்பதுதான் !

தங்கத்தின் இலக்கணமோ தான்வெந்து ஒளிர்வதுதான் !

தூயநபி வரலாறோ துயர்வென்று நிலைப்பதுதான் !

தூய ஹிஜ்ரத் தீனைத்துளிர் விடச் செய்வதுதான் !

 

சேய்செய்யும் பிழைக்காகப் பெற்றமனம் அழுவதுபோல்

சிந்திக்க வழிதெரியா சிறுமனத்தார் பாவங்களை

தான் மனதால் மன்னித்து, தன் மனதால் நேசித்து

தீன்மனதால் ஒன்றிணைந்த தியாகமதே ஹிஜ்ரத்தாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *