மின்சாரமில்லா இரவுகள்

இலக்கியம் கவிதைகள் (All)

electricஇரவின் வெற்றிடச் சாலையில்
ஒருவருமில்லை
காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி
துயிலுற சென்றது போலும்
வியர்வையில் அலங்கரித்து
அழகியல் படிக்கிறது உடல்

நிசப்த இரவில்
சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது
கொசு கொஞ்சி ரீங்கரித்து
முத்தமிட்டு வலியூட்டுகிறது
மின்சாரமின்மையின் நெருடல்கள்
இரவில் தான் நாட்டியம் புரிகிறது

டடக் டடக் டடக் என
சூழலும் மின்விசிறியும்
உயிர்பொருள் இன்றி
தீடீரென இறந்துபோவதும்
துக்கத்தை தொண்டைக்குள் நிறுத்தி
அழமுடியாமல் மனம்
காற்றிற்கு அரற்றுவதும்
வாடிக்கையானது நித்தமும்

உறக்கம் உறங்க மறுத்து
உழன்று சுழல்கிறது ஆழகடல் சுழலைபோல
இமைகள் தழுவுவதும்
இமைகள் இணைய மறந்து
ஊடல் கொண்டு தவிப்பதுமாக
கழிகிறது மின்சாரமில்லாத இரவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *