வீடென்று எதனை சொல்வீர்…?

இலக்கியம் கவிதைகள் (All)

வீடென்று எதனை சொல்வீர்...? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன்

வீடென்று எதனை சொல்வீர்…?
என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல
இணைய மடலாற்குழுமத்தில் வீடு என்ற தலைப்புக்கேற்ப நண்பர் இப்னு ஹம்துன் எழுதிய
கவிதை இது.. இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.. 
*
வீடென்ப வீடில்லை; வீடென்று சொன்னாலே
  ஓரமைதி மனதுள்ளே குடைவிரிக்கும் இவ்வுலகில்
கூடொன்றில் பறவையினம் கொள்கின்ற மனமகிழ்ச்சி;
  குளக்கரையின் தென்றல்போல் குளிர்ச்சியினை மனங்காணும்
தேடல்கள் வீட்டுக்கே! தெள்ளியநல் வழிமுறையை
   தேர்ந்தெடுத்து நடப்பவர்க்கு தித்திக்கும் வீடுபேறு!
மாடங்கள்; மாளிகைகள்; மண்குடிசை மதிப்பீட்டில்
  மனம்ஏற்றால் அதுவீடு!  மற்றபணம் வெறுந்தாளே!
கருவாகத் தாய்வயிற்றில் குடியிருந்தோம்; காலத்தே
     கண்விழித்தோம் மண்ணிதிலே! கவினுலகம் மறுவீடு
திருவாக ஆனபின்னர் தேடுகின்றோம் தனிவீடு.
    திக்கெல்லாம் அலைந்தாலும் தலைசாய்க்க இடம்வேண்டும்
விருப்பந்தான் வீடாகும்; வெறுப்புகளைப் புறந்தள்ளி
   விழைகின்ற நலம்யாவும் வீட்டுக்குச் சேர்க்குமுன்னே
வருகைக்குச் சான்றளிக்க வீடொன்று எழுப்பிடுவோம்
    வீடென்றால் வீடில்லை; வியப்பளிக்கும் வரலாறே!
எண்ணமதன் வீடாகும் இதயந்தான்; ஏற்றமிகு
   எந்தமிழே வீடென்பேன் கவிதைக்கு. – பெண்ணவளின்
கண்ணதனை வீடென்பார் காதலிப்பார். – கடவுளவன்
   கருணையிலே உறைபவர்தாம் வேறெதனை வீடென்பார்?
வண்ணமதன் வீடென்றால் ஓவியந்தான் – வாழ்விதிலே
    வகைவகையாய் வீடுண்டு; வசிப்பனவும் நினைவுகளே!
சின்னமகள் சிரிப்பழகில் சிலநேரம் வாழ்ந்துவிட்டால்
  சிந்தனையில் வீடென்று சிறப்பதுவும் வேறிலையே!
கலைநட்பும் வீடாகும்;  கடுமனதும் கனமிழக்க
 கண்ணீரே மனங்கழுவும் கடவுளவன் வீட்டினிலே!
இலக்கிங்கே வீடென்றால் எல்லாமும் வீடுகளே
    இலைப்புழுவா? விண்மீனா? எண்ணம்போல் வாழ்வாகும்
நிலைகொள்ளும் ஓரிடமே நிம்மதியின் வீடென்போம்
   நிலையாமை இவ்வாழ்க்கை நிதர்சனமாய் அறிந்தபின்னே
விலையில்லா வீடென்றால் விண்ணகம்தான் உள்ளபடி
     உயர்வான வீட்டுக்கே விழைந்திடுவோம் பண்புடனே!
பஃக்ருத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *