அருட்பெட்டகம் அல்குர்ஆன் ! – கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி

இலக்கியம் கவிதைகள் (All)

உறவில்லான் தனக்கு   

உறவாய் அமைந்த

தோழரோடு உரையாடிய

இறைவனின் பேச்சு !

சத்தியத்தின் சாறு ; 

நித்தியனின்

நீங்காத அருட்பேறு !

விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்

வாழ்வியலை வெளிச்சமயமாக்கும்

ஒளிகுன்றா வான்விளக்கு !

சுவனத் தென்றலைச்

சுவாசித்துணரத் தூண்டும்

இறையருள் வசந்தம் !                                                       

வல்லான் இறையின்

வளமார் ஆற்றலை

ஊற்றாக்கிக் காட்டும்

அறிவுத் தேனருவி !

பூமான் நபிகளின்

பொற்கரத்தில் ஒப்படைக்கப்பட்ட

அல்லாஹ்வின் அற்புதம் !

வாழ்வியல் பூங்காவில்

இடை இடையே முளைத்துவிடும்

அஞ்ஞானக் காளான்களை

அடிவேர் அறுக்கும்

அருமா மருந்து !

செம்மைமிகு செம்மல்களின்

சிந்தைச் சுவர்களில்

ஞானச் சாந்துபூசும்

சந்தனச் சொல்லோவியம் !

இனியநபி இதயத்தில்

இறைவன் எழுதிய

மாமறை இலக்கியம் !

தாய்மை துலங்கிடத்

தரணியில் வந்துதித்த

துய்யோன் தூதர்களின்

வரலாற்றுப் பொக்கிஷம் !

உவமைக் கண்களால் 

பார்த்திடா முடியாத

உயர் பண்புகளின்

அருட் பெட்டகம் !

கருணை நாயகனின்

இணையற்ற புகழுக்கு

வளம் சேர்க்கும்

வற்றாத சமுத்திரம் !

ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்

ஆண்டவனின் அருட்சுரம் ;

உள்ளம் உயர்வடைய

இறைவன் ஊற்றிய உரம் !

நன்றி :

இனிய திசைகள்  – சமுதாய மேம்பாட்டு மாத இதழ்

செம்டம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *