ஈழமும் பாலஸ்தீனமும்

முதுவை சல்மான்

வந்தவர்களால் வதைபடும் அரபு இனம்
சொந்தவர்களால் சூரையாரப்படும் தமிழ் இனம்
வேதனைகளின் விலை நிலங்கள்
சோதனைகளை தாங்கிடவே அவதரித்தவர்கள்

மகனில்லா தந்தை உண்டு தாயுண்டு
தந்தையில்லா மகனுண்டு மக்களுண்டு
தாயில்லா சிசுக்களும் உண்டு- இனி
இழப்பதற்கு உங்களிடம் என்ன உண்டு

இதமான அதிகாலைப்பொழுது
ஆவும் அதன் சேயும் தரும் சப்தம்
வீதியில் காய்கனி விற்போர் குரல்
விடியலை உலகிற்கு பறைசாற்ற துடித்து

கூக்குரலிடும் சேவல் கோழி பறவையினம்
காலைப்பொழுதை வரவேற்கும் சிவப்பு சூரியன்
கடற்கடை கடற்காற்று
நதி ஓரம் ஆற்றுப்படுகை

அங்கமர்ந்து சிறார் கட்டும் மணல் வீடு
அருவியின் ஓசை, அலை ஓசை
குழந்தை பேசும் கொஞ்சும் மழலை
தத்தி நடக்கும் அதன் முத்து நடை

இவையெல்லாம் ரசிக்க உங்களுக்கு ஏது தருணம்
வலிகளும் வேதனைகளும்தான் இந்த
உலகம் உங்களுக்கு தந்துள்ள பரிசு
ஒப்பாரிகளும், ஓலங்களும் உங்கள் தேசிய ஓசை

உறுப்பு இழந்த உயிர்கள்
உயிர்களை துறந்த உடல்கள்
உலகமே வேடிக்கை பார்க்கும் வேதனை -இந்த
ஒவ்வாமையே மனித குலத்தின் சாதனை

அரபுக்கள் இடம் தந்தார்கள்
ஈழவர்கள் இடம் கேட்டார்கள்
இவை இரண்டும் கொலைக்குற்றமா?
இரக்கமே இல்லா இனப்படுகொலைகள்

தட்டிக்கேட்போரெல்லாம் தீவிரவாதிகள்
தட்டிக்கொடுப்போர்தான் தன்மானவாதிகள்!
தடையே இல்லாமல் செல்லும் படுகொலைகளில்
தடையற்று நடந்து கொண்டிருப்பது ஆயுத விற்பனை

பினவாடையின் பாவக்காற்றில்
பணம்பார்க்கும் மோச கூட்டம்
இங்கேயும் உள்ளனர் அவர்களின்
இனமான சகாகூட்டங்கள்

ஜாதியப்போர்வையிலும்
மதவாதப்பார்வையிலும்
மண்ணாலும் ஆசையிலும்
போதிய அளவில் இங்கேயும் உள்ளனர்.

முதுவை சல்மான்
ரியாத், சவூதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *