தாலாட்டு

கவிதைகள் (All)

வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில் அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு!

அலுவலகம் விட்டு –
அம்மா வரும் வரைக்கும் –
கேசட்டில் தாலாட்டு – கேட்டபடி கண்ணுறங்கு!

ஒரு மணிக்கு ஒரு பாடல்
ஒளிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் – விழி சாத்தி நீயுறங்கு!

9 மணி ஆனால் உன் அப்பா சொந்தமில்லை –
9:30 மணி ஆனால் உன் அம்மா சொந்தமில்லை –
ஆயவும் தொலைக்காட்சியும் அசதியில் தூங்கிவிட்டால் –
தூக்கத்தை தவிர துணைக்கு வர யாருமில்லை!

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று – இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே –
உன் தொட்டில் ஓரத்தில் –
என் நினைவு – ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கி, பிதுங்கி போகிற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும்
பூப்பூவாய் உனது புகம் புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய் –
தங்க மடியில் தூங்குவதாய் –
கண்ணனே கண்மணியே – கனவு கண்டு – நீயுறங்கு!

புட்டிபால் குறையவில்லை –
பொம்மைக்கும் பஞ்சமில்லை –
தாய்ப்பாலும் தாயும் இன்றி –
தங்க மகனுக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உன்னை அணைத்தால்
சுரக்காத மார்பும் சுரக்குமடி- கண்ணுறங்கு!

தாலாட்டு பாட்டில் தளிரே – நீ
தூங்கிவிட்டால கோலாட்டம் ஆட
கொண்டவனுக்கும் ஆசை வரும்!

உறவுக்கு தடையாக
‘ஒ’ என்று அலறாமல் –
இரவ்க்கும் மிச்சம் வைத்து
இப்போது – நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் – நல்லவளே கண்ணுறங்கு!

– வைரமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *