நிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்

கவிதைகள் (All)

தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

பொத்தல்கள் இருப்பதெல்லாம் புல்லாங்குழலாவதில்லை

பொது நலங்கள் பேசுபவையெல்லாம் முஸ்லிம் லீக் ஆவதில்லை

சமுதாயத் தொண்டு முஸ்லிம் லீகிற்கு விளம்பரப் பதாகையல்ல – விடியல் விளக்கு

கூட்டத்தைக் கூட்டிக் காட்டிக் குதூகலிக்க – முஸ்லிம் லீக், மோடி வித்தைக்காரன் அல்ல

சமீபகால சலசலப்புப் பேர்வழிகள் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக சில அனாமதேயங்கள் அங்கலாயிக்கின்றன

உண்மை பயிரை விடக் களைகள் அதிகம் வளர்வது வாடிக்கை. அதை வேடிக்கை பார்க்காது ஊர் கண்டிப்பாக களைகளைப் பிடுங்கி விடும். இதுதான் சமீப அரசியல் அரங்கில் நடந்துள்ளது.

முஸ்லிம் லீக் என்பது நெற்பயிர் அதன் வளர்ச்சி ’மெல்ல’ எனினும் ஊர் ’சொல்ல’ – ’வாழ்ந்த’ உயர்வாக இருக்கும்.

முஸ்லிம் லீக் எடைபோடுவது நிகழ்கால யதார்த்தங் களையே அன்றி பழைய பதார்த்தங்களை அல்ல.

துடுக்குத்தனம் முஸ்லிம் லீகிற்கு எப்போதும் இருந்த தில்லை. அதனால்தான் அரசில் தோழமைக்கு அணி சேர்த்து வருகிறது.

அந்த அணியின் கனிதான் அப்துல் ரஹ்மான் வேலூரில் விளைந்தார்.

வெப்பமான வேலூர் தென்றலான அப்துல் ரஹ்மான் அவர் களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

அதுவும் உலகு மெச்சும்படி, வாக்குகளில் உச்சப்படி

அல்லாடிப் போன – தள்ளாடிப் போன சிலர் சொல்லாடிப் பார்த்தார்கள். முடிவில் சோர்ந்து போனார்கள் !

அமைதியாக இருந்தார் தலைவர் முனீருல் மில்லத்      கே.எம்.கே அவர்கள்.

அல்லாஹ், உடன் இருப்பது பொறுமையாளர் பக்கம் தானே !

சமுதாயச் சாலையில் வீராப்புக் காட்டி வந்த வெற்று வேட்டுகள் – புற்றீசல்கள், பொழுதுக்குள் வீழ்ந்து பொசுங்கிப் போனார்கள் !

பொய்யான மனிதநேய வேடம் போட்டதில்லை முஸ்லிம் லீக்!

மெய்யான அதன் கீர்த்தியை சமுதாயம் இன்று மெருகேற்றி வைத்திருக்கிறது !

காயிதே மில்லத் எனும் கண்ணியப் பூங்காவை ஊரார் உணர்ந்தே உள்ளனர்.

அந்தப் பூங்காவில் ஒளிரும் முஸ்லிம் லீக் எனும் வெளிச்சத்தைத் தேடி வந்து சமுதாயம் இளைப்பாறும் – களைப்பாறும். இன்றும் – என்றும் !

மணிச்சுடர் 28/29 மே 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *