முஜாஹிதேமில்லத் – நினைவுகள்

கவிதைகள் (All)

-(திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர் )
இன்று
ஜுன் இருபத்தைந்து
இதே நாளில்தான்
ஒரு மாமனிதர்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்
என்று நான் சொல்லமாட்டேன் !
அவர்
தன் பேச்சை நிறுத்திக் கொண்டார் !

கடைசி தருணத்தில்
அவர் உயிருக்காக போராடினார்
என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் !
“அவர் கடைசி மரணம் வரை
உரிமைக்காக போராடினார்”
“மக்களின்
உரிமைக்காக போராடினார்”
என்று மனிதத்துவம் உள்ளவர்கள் கூறுகிறார்கள் !

ஆம்
குலாம் மஹ்மூத் பனாத்வாலா
மூமின் எனப் பொருள்படும்
”மேமன்” சமூகத்துப் போராளி
மூமின்களுக்காக பாடுபட்டார் !
ஆகஸ்ட் பதினைந்தில்
(ஆயிரத்து தொள்ளாயிரத்து
முப்பத்து மூன்றில்) பிறந்த அவர்
முழு இந்திய மக்களின்
உரிமைக்காகவும் பாடுபட்டார் !

இளமைப்பருவத்தில்
சமூக சேவை செய்தது
அவரின் வழமையாகும் !
இந்த இனியமாமனிதர்
படித்த படிப்பு வணிகமாகும் !

ஆசிரியர் பேராசிரியர்
என அரும்பணி செய்தார் !
முஸ்லிம் லீக்கில் இணைந்து
நாட்டுக்கு
பெரும்பணி செய்தார் !

சொந்த தொகுதியில்
மந்திரிகள் கூட
அடுத்த தடவை வென்றதில்லை !

இந்த மனிதர்
வந்த தொகுதியில்
அடுத்தடுத்து ஏழுதடவையும்
தோற்றதில்லை !

மலையாளம்
தெரியா விட்டாலும்
தங்களின் தொகுதியின்
அடையாளமாக
அவரையே தேர்ந்தெடுத்தனர் !

பொன்னானி மக்கள்
அவருக்கே தங்கள்
பொன்னான வாக்குகளை
கொடுத்தனர் !

கேள்வியே கேட்காமல்
உங்கள் எம்பி
இருந்தார் என்று
நீங்கள் சொல்லலாம் !
எப்போது
இவர் கேள்வி கேட்காமல் இருந்தார்
என்று இவரைப் பற்றி நீங்கள் கேட்கலாம் !

அவரை நான்
பார்த்ததில்லை !
படித்திருக்கிறேன் !
அவர் பேசக் கேட்டதில்லை
அவரைப் பற்றி
பேசியதை கேட்டிருக்கிறேன் !

சிராஜுல் மில்லதின்
மணிச்சுடர் எனக்கு
முஜாஹிதே மில்லதை
அறிமுகப்படுத்தியது !

காயிதே மில்லதின்
வழிவந்த அவரின் கருத்துக்கள்
என்னை ஒருமுகப்படுத்தியது !

இந்திய முஸ்லிமாகிய
நாம்
இந்த மாமனிதரை
தெரிந்திருக்க வேண்டும் !

ஆம்
பனாத்வாலாவை
அறிந்திருக்க வேண்டும் !

சிறுபான்மையான
இந்த சமூகம்
நாட்டிற்கு தன்னை
பெரும்பான்மையாக
தியாகம் செய்திருக்கிறது !

எனினும் – நாடு
முன்னேற்றத்தின் போது
முஸ்லிம்
சமூகம் பின்தள்ளப்பட்டது !
புள்ளி விபரங்களோடு
பார்லிமெண்டில் – இவர்
எடுத்து வைத்தார்

நாற்பத்தேழிற்கு
பின் எவ்வளவோ
சோதனை
எனினும்
எண்பத்து ஐந்தில்
பெரும் சோதனை !

அப்போதுதான்
மலர்ந்தது
பனாத்வாலாவின் சாதனை !
ஆம்
ஷரீஅத் சட்டத்தை
சங்பரிவார்கள் எதிர்த்தார்கள்

பொது சிவில்
சட்டம் வேண்டும் என்று
குதித்தார்கள் !

இன்று
ஜஹீரா ஷேக்குகளுக்காக
கவலைப் படாதவர்கள் !
அன்று
ஷாபானுக்களுக்காக
கதறினார்கள் !

ஒரு
ஜீவன் கொலை செய்யப்படும் போது
சிரிப்பவர்கள்
ஒரு பெண்ணுக்கு
ஜீவனாம்சம் வேண்டுமென்றார்கள் !

சந்திர சூட்கள்
ஷரீஅத்தை தெரியாமல்
இருந்தது தவறல்ல !
ஆரிப் முகமதுகான்கள்
ஷரீஅத்தை அறியாமல்
இருந்ததே தவறாகும் !

மாற்றுக் கட்சிகளில்
முஸ்லிம்கள் என காட்டப்பட்டவர்கள்
தங்களை
முஸ்லிம்கள் என முகம் காட்டவே
மறுத்தார்கள் !

ஷரீஅத்தை எதிர்த்தார்கள் !
இஷ்டப்பட்டால்
மாற்றுவது மனிதச்சட்டம் !
மாற்ற முடியாதது
புனித ஷரீஅத் சட்டம் !

அரசனிடம்
நீதியை எடுத்து சொல்லுவது
ஜிஹாதாகும் !
ஆம்
நீதிமிக்க ஷரீஅத் சட்டத்தை
அன்று அரசிடம்
விளக்கியது பனாத்வாலா
என்ற முஜாஹிதாகும்

அல்லாஹ்வின் வேதம்
நபி மொழி நின்று
ஷரீஅத் சட்டத்தை – பார்லிமெண்டில்
விளக்கினார்

ஆம்
பொது சிவில் சட்டம்
அமுலாவதை பனாத்வாலா
விலக்கினார் !

அவரைப் பற்றி
கூற நிறைய இருக்கிறது !
கூற
நேரம் குறையதான் இருக்கிறது !
பனாத்வாலாவை
அனைவருக்கும்
அறிமுகப்படுத்துங்கள் !

பாரதத்தில்
முஸ்லிம் லீக்கில்
அனைவரையும்
ஒருமுகப்படுத்துங்கள் !

( துபாயில் அமீரக காயிதே மில்லத் பேரவை நடத்திய முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் நினைவு தினத்தில் வாசிக்கப்பட்ட கவிதை )

திருச்சி ஏ முஹம்மது அபுதாஹிர்
050 4760775
thahiruae@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *