குடிநீருடன் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்
முதுகுளத்தூர் 14 ஆவது வார்டு செல்லி அம்மன் கோயில் தெருவில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால், தொற்று நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியினர் காவிரி கூட்டுக் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பிடிக்கும் இடத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில் நிரம்பி வடிந்து தேங்கி நிற்கிறது. கால்வாயை சுத்தப்படுத்தாமல் இருப்பதால், கழிவுநீர் நிரம்பி வழிந்து ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதை தினமும் அகற்ற பேரூராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதியினர் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்த கழிவுநீர் குடிநீருடன் கலப்பதாகவும், இதனால் அப்பகுதியில் அனைவருக்கும் தொற்று நோய் பரவுவதாகவும், எனவே உடனடியாக கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.