சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருந்து அறிமுகம்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து (மாத்திரை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிஜிஆர்- 34 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை தேசிய தாவிரவியல் ஆராய்ச்சி நிறுவனமும் (என்.பி.ஆர்.ஐ.),
மத்திய மருத்துவ, நறுமணச்செடிகள் நிறுவனமும் (என்.ஐ.எம்.ஏ.பி.) இணைந்து தயாரித்துள்ளன.
இதை அறிமுகப்படுத்தி அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர் ஏ.கே.எஸ்.ரவாத், டாக்டர் சி.எச்.வி.ராவ் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
இந்தியர்களில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. இருப்பினும், நோய்க்கு சரியான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
எனவே, 500 மூலிகைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, தருஹரித்தா, மஜீத், மெதிகா உள்ளிட்ட ஆறு மூலிகைகள் அடையாளம் காணப்பட்டு, அந்த மூலிகைகளில் சரியான விகிதங்களில் கலந்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பிஜிஆர்.-34 எனும் மாத்திரைகள் லக்னோவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆரின் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்பட்டன.
இந்த மாத்திரை ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, இதர மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் குறைக்கிறது. மேலும், கணையத்தில் இன்சுலினைச் சுரக்க வைக்கிறது. ஏ.ஐ.எம்.ஐ.எல். என்ற நிறுவனத்திடம் மருந்தை தயாரித்து சந்தைப்படுத்தும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய மருந்துக் கடைகளிலும் ரூ.5 எனும் விலைக்கு ஒரு மாத்திரை கிடைக்கும் என்றனர்.