பிறந்த பயன்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாபின்
இறுதி வரிகளைப் படித்ததன் தாக்கம்
போதாது போதாதென்று
பொழுதெல்லாம் பாடுபட்டு
ஆதரவு அதுவே என்றெண்ணி
அனைத்தையும் புறந்தள்ளி
காதலுடன் பணத்தைக்
கணக்கின்றி சேர்த்து
ஈதலுக்கும் மனமின்றி
இன்பமாய் செலவுசெய்து
போதலுக்கும் மனமின்றி
புதையலென சேர்த்து
பூதமெனக்காத்து வாழ்ந்தால் ,
புண்ணியமென்ன மானிடரே
சாதலுக்கு நாள் குறித்து
சத்தம் எதுவுமின்றி -எம
தூதர்கள் வந்து , தூக்கிச்செல்கையில்
துணிகூட உருவிவிட்டே ,
பூதவுடல் எரிக்கின்றார் (அ )
பூமியில் புதைக்கின்றார் .
காதற்ற ஊசியும்
கடைவழிக்கு வாராதென்ற
போதனையை உமது
புத்தியில் நிறுத்திடுவீர் .
பெற்ற பிள்ளைகட்கும் பிற
சுற்றத்தாருக்கும் உதவி
உற்ற பசியில் வாடும்
மற்றவர்க்கும் உதவி
சற்றே நாம் வாழுகின்ற
சமூகத்திற்கும் உதவி
மற்றவர்கள் போற்ற
மனிதனாய் வாழ்ந்திடுவீர் .
இறந்த பின்னும் இருப்போரின்
இதயத்தில் வாழ்தலொன்றே
பிறந்த பயன் என்னும்
பேருண்மை உணர்ந்திடுவீர்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
23.05.2016
Tags: பயன்