மாரடைப்பை தவிர்க்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு
- News
- April 9, 2016
- மருத்துவக்குறிப்புகள்
- 1 minute read
‘மாரடைப்பை தவிர்க்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு’
By சிதம்பரம்
சிதம்பரம் அருகே புவனகிரி ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப் பள்ளியில், மகரிஷி ஆன்மிக தொண்டு அறக்கட்டளை சார்பில் மாரடைப்பு வராமல் தடுக்கும் வழிகள் என்ற தலைப்பில் இயற்கை மருத்துவ விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது.
அறக்கட்டளைத் தலைவர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜே.சண்முகம் முன்னிலை வகித்தார். செயலர் ஆர்.சரவணன் வரவேற்றார்.
முகாமில், இயற்கை ஆர்வலர் டி.ராஜமாணிக்கம் பேசியது: ரத்தக் குழாயில் உள்ள கெட்ட கொழுப்பின் அடைப்பு அளவு 70 சதவீதத்தை தாண்டும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, இஞ்சிச் சாறு, ஆப்பிள் வினிகர் இவற்றால் தயாரித்த கஷாயம் சாப்பிட வேண்டும். மேலும், எலுமிச்சை, கடுக்காய், பக்குவமாக சுட்ட பூண்டு ஆகியவற்றை சாப்பிடுவதால் மாரடைப்பு பிரச்னையை தவிர்க்கலாம்.
மேலும் எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தேங்காய் பால், செக்கில் ஆடிய எண்ணெய், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம். மேலும், மாதுளை, நெல்லிக்காய், கொய்யா, வெள்ளரி, கிர்ணி பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். முட்டைகோஸ் சாறு, வெங்காயச் சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும் என்றார்.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் இயற்கை உணவு வழங்கப்பட்டது. வயலாமூர் ஆர்.சிவக்குமார் நன்றி கூறினார்.