பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் விருப்ப மனு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி மற்றும் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.-வினர் புதன்கிழமை விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
பரமக்குடியில் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் சோ.பா.ரெங்கநாதனிடம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்து ரெங்கநாதன் கூறியது:
பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிட, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமதி பாலசுப்பிரணியன், மாநில இணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட விவசாய அணித் தலைவர் முருகேசன் ஆகியோர் மனு அளித்துள்ளனர். முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட மேற்கு மாவட்ட தலைவரான எனது பெயரிலும், மாநில சிறுபான்மைச் செயலாளர் ஜெ.எம்.முகம்மது, மாநில இணைத் தலைவர் ராமபாண்டியன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்தார். மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஆர்.எஸ்.ஒய்.ரபீக்அகமது, நகர் தலைவர் டி.ஆர்.கோதண்டராமன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.