குறளினில் பலவுரைத்தான்!
ஈரடியால்
இருள் களைந்தான்!
வாழ்வியல் நெறிகளை வண்தமி ழாக்கியெம்
வாழ்வை உயர்த்தவந்தான்! – வையத்
தாழ்வை அகற்றவந்தான்!
நீள்கவி ஏதுமில் லாதுஈர் அடிகளில்
நிறைவுறு பொருளுரைத்தான்! – திருக்
குறளினில் பலவுரைத்தான்!
அகத்தழுக் கிலையெனில் அதுஅனைத் தறம்என
அரியதோர் கருத்துரைத்தான்! – அறம்
பெரிதென எடுத்துரைத்தான்!
இகத்தெழு வாழ்வினை எழிலுற வாழ்பவர்
இங்குவிண் காண்பரென்றான்! – எழில்
பொங்கிடக் காண்பரென்றான்!
ஊழ்வலி தென்றவன் ஊழையும் வென்றிட
உழைப்பினை ஊக்குவித்தான்! – மனக்
களைப்பினைப் போக்குவித்தான்!
வாழ்புவி பண்புடை யார்களி னாற்றான்
வாழ்ந்திடும்; பண்பிலையேல் – அது
வீழ்ந்துமண் ணாகுமென்றான்!
அன்பினைப் போற்றிய வள்ளுவன் அன்பினை
அறத்திற்கு மட்டுமல்ல – அது
மறத்திற்கும் ஓட்டுமென்றான்!
இன்பமே நன்றெனக் கொள்பவர் துன்பத்திற்(கு)
ஏன்துயர் கொள்ளலென்றான்! – உயர்
வானசிந் தனையளித்தான்!
இல்லற மாட்சியை நல்லர சாட்சியை
ஈகையை வீரத்தினை – உயிர்
ஆகிய மானத்தினை
நல்லொழுக் கத்தினைக் காதலை என்றுபல்
நலங்களை எடுத்துரைத்தான்! – இந்த
நிலம்நிலைத் திடவுரைத்தான்!
வாழ்வியற் கூறுகள் யாவையும் தொட்டவை
வளம்பெறும் வழியமைத்தான்! – இருள்
கலைந்தொளிர் புவிபடைத்தான்!
நாழிலும் பொழுதிலும் நாம்குறள் போற்றிடின்
நன்மைகள் கூடிவிடும்! – வரும்
புன்மைகள் ஓடிவிடும்!
தெள்ளிய திருக்குறள் நெறிகளில் ஆழ்ந்தவை
தேர்ந்துபின் பரப்பிடுவோம்! – அவை
ஓர்ந்தறம் உணர்த்திடுவோம்!
வள்ளுவன் வாழ்ந்தமண் வான்புகழ் கொண்டது!
வண்தமிழ் ஓங்கிவிடும்
…