பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மரண பயத்தில் பயணிக்கும் மக்கள்
பரமக்குடி வளர்ந்து வரும் நகரம் என்பதால் சுற்றுபுற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பரமக்குடிக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுதவிர அதே சாலையில்தான் ராமேஸ்வரம்-மதுரை ரயில் பாதை செல்கிறது. ரயில் வரும் நேரங்களில் கேட் அடைக்கப்படும்போது இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் சந்தைக்கடை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இச்சாலை குறுகியதாக இருப்பதால் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் இரண்டு வாகனங்கள் வரும்போது செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலையின் இருபுறமும் மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பஸ்களில் ஜன்னலோரம் பயணம் செய்யும் பயணிகள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தினமும் பயணம் செய்கின்றனர். இதுகுறித்து பாம்பூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், ‘முக்கிய சாலையில் அதிகமான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளதால் கனரக வாகனங்கள் வருவதாலும் சாலைகள் சேதமாகி வருகிறது.
மழைகாலங்களில் சாலையின் இரண்டு பகுதியிலும் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்களில் வந்து செல்பவர்கள் மரண பயத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம். சாலையோரத்தில் மின்விளக்கு வசதியும் கடையாது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.