விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: முதுகுளத்தூர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மாநிலப் போட்டிக்கு தகுதிபெற்ற முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் எம்.சோபன்குமார் என்ற மாணவர் 80 கிலோ பிரிவில் குத்துச் சண்டை போட்டியில் முதலிடத்தையும், அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் வி.அஜித் என்ற மாணவர் 17வயது பிரிவில் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும்,19 வயது பிரிவில் பிளஸ்2 பயிலும் எம்.முகம்மது பாசித் என்ற மாணவர் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டிகளில் வென்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.கமால்பாட்ஷா, எம்.தமிமுன் அன்சாரி ஆகியோரையும் பள்ளி கல்விக் குழுத் தலைவர் ஏ.ஷாஜஹான்,தாளாளர் எம்.எஸ்.சௌக்கத்அலி, தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் ஆகியோர் பாராட்டினர்.
மாநிலப் போட்டிகள் 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் திருநெல்வேலியில் நடைபெற உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத் தெரிவித்தார்.