முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
முதுகுளத்தூர், கடலாடி, கமுதியில் சனிக்கிழமை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
முதுகுளத்தூர் சோனை மீனாள் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் தலைமை வகித்தார். பேரணியானது, காந்தி சிலையில் தொடங்கி பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அரசு கல்லூரி முதல்வர் செல்லத்துரை, மண்டல துணை வட்டாட்சியர் லலிதா, தேர்தல் பிரிவு தனித்துறை வட்டாட்சியர் ரத்தினமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சண்முகநாதன் நன்றி கூறினார். கடலாடி அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு, வட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார். அரசு கல்லூரி முதல்வர் சரவண கைலாஸ், தேர்தல் தனிப்பிரிவு துணை வட்டாட்சியர் வரதராஜன், ஊராட்சிகள் ஆணையர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சொக்கர் நன்றி கூறினார்.
கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணிக்கு, கல்லூரி முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் செந்தில்குமார் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியானது, கல்லூரி வளாகத்தில் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. மண்டல துணை வட்டாட்சியர் ஜெயராணி, வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் வாகைப்பாண்டியன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் பூமிநாதன் நன்றி கூறினார்.