சிறிய மழைக்குகூட சகதிக்காடாக மாறும் வாரச்சந்தை முதுகுளத்தூரில் வியாபாரிகள், மக்கள் அவதி

Vinkmag ad

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் வாரச்சந்தை சிறிய மழைக்குக்கூட தாங்கமுடியாமல், சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. முதுகுளத்தூர் பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த சந்தைக்கு வருகின்றனர். சந்தை பேட்டைக்குள் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பேட்டைக்கு வெளியில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நடைபாதையிலும் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு வியாபாரிகளும் பொதுமக்களும் நிறைந்து காணப்படும் இந்த சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

சிறிய மழை பெய்தாலும் சந்தைப் பேட்டையில் தண்ணீர் தேங்கிவிடுகிறது. தண்ணீர் வெளியே செல்லும் வகையில் போதிய வடிகால் வசதிகள் இல்லை. மேலும் வியாபாரிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொட்டகை வசதி அமைக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் தார்ப்பாய்களை கொட்டகையாக போர்த்தி அதன்கீழ் வியாபாரம் செய்கின்றனர். இதனால் மழைக்காலத்திலும், வெயில் காலத்திலும் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். மழைக்காலத்தில் ஒட்டுமொத்த பொருட்களும் வீணாகிவிடுகிறது.

மேலும், சந்தைப் பேட்டைக்குள், ஆடு அடிக்கும் இடம், கோழிக்கறி கடைகள், மீன் கடைகள் போன்றவை போதிய பராமரிப்பு இன்றி உள்ளன. கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியே ஈக்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே சந்தைப்பேட்டைக்குள் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, பேவர்பிளாக் கற்கள் பதித்து, மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சந்தைபபேட்டை வியாபாரிகள் சிலர்   கூறுகையில், ‘‘பேரூராட்சி சார்பில் வாரம் தோறும் சந்தை கூடுகிறது. ஆனால் இங்கு போதிய வசதிகள் இல்லை. சாதாரண மூன்றாம் நிலை, இரண்டாம் நிலை பேரூராட்களில் கூட சந்தைகள் நல்ல நிலையில் செயல்படுகின்றன. ஆனால் இங்கு சிறிய மழை பெய்தால்கூட சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அனைவரின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் சந்தையில் போதிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.  இது குறித்து பேரூராட்சி அலுவலகத்தில் கேட்ட போது, ‘‘விரைவில்  சந்தைப்பேட்டையில் கடைகள் கட்ட துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார்.

News

Read Previous

முதுகுளத்தூர் அருகே வங்கிக்கு செல்ல 25 கிமீ பயணம் விவசாயிகள் அவதி

Read Next

விஞ்ஞானிகளுக்கு அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published.