முதுகுளத்தூர் அருகே வங்கிக்கு செல்ல 25 கிமீ பயணம் விவசாயிகள் அவதி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே கூட்டுறவு வங்கிக்கு செல்ல விவசாயிகள் 25 கிமீ பயணிக்கின்றனர். எனவே தங்களது கிராமங்களை அருகில் உள்ள வங்கிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் அருகேயுள்ள மட்டியனேந்தல் பகுதியில் தாலியேனேந்தல், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. இக்கிராமங்களில் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி, நெல், மிளகாய் உள்ளிட்டவை பயிர் செய்யப்படுகின்றன. இந்த கிராமங்கள் அனைத்தும் 25 கிமீ தொலைவில் உள்ள செம்பொன்குடி கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் போன்ற தேவைகளுக்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
செம்பொன்குடி கிராமத்திற்கு போதிய போக்குவரத்து வசதி கிடையாது. இதனால் லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதி விவசாயிகளுக்கு தேரிருவேலியில் உள்ள கூட்டுறவு வங்கியே மிகவும் வசதியாக உள்ளது. இங்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதியும் உள்ளது. எனவே தங்கள் கிராமங்களை தேரிருவேலி கூட்டுறவு வங்கியில் இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மட்டியனேந்தலை சேர்ந்த விவசாயி லூர்துமனுவேல் கூறுகையில், ‘‘ செம்பொன்குடி கூட்டுறவு வங்கியில் எங்கள் கிராமங்கள் இணைந்துள்ளதால் அரசுவழங்கும் எந்த சலுகையையும் பெற முடியவில்லை.
25 கிமீ தொலைவு செல்வதற்குள் பெரும் சிரமத்தை சந்தித்துவிடுகிறோம். போதிய போக்குவரத்து வசதியும் கிடையாது. எனவே இந்த கிராமங்களை தேரிருவேலி கூட்டுறவு வங்கியில் இணைக்க கலெக்டர் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் நலன் கருதி எங்கள் கிராமங்களை தேரிருவேலி கூட்டுறவு வங்கியோடு இணைக்க வேண்டும்’’ என்றார்.