கருகிய மொட்டுகளுக்குக் காணிக்கை !
கருகிய மொட்டுகளுக்குக் காணிக்கை !
” தலைவாரி பூச்சூடி உன்னை பாட
சாலைக்கு போஎன்று சொன்னாள் உன்அன்னை ”
கலைபயிலும் சாலைக்கு விலையில்லாமணியை
கையசைத்து அனுப்பினாள் அன்னை
குலைநடுங்கும் சேதியைக் கேட்டாளே
குதலைப் பிஞ்சுகள் கூவியடங்கியதை !
தலைவாழை இலையிலே தங்கங்களை
இலையோடு சுருட்டிஇன் னார்எனஅறிய
அடையாளம் காணக்கூடத் தடையானதே
குடைஊர்ந்து உலாவரும் கும்பேசுவரரே !
குறும்புகள் காட்டும் அரும்புகள்
கரும்புகையை மூச்சாக்கி மூச்சடக்கி
கட்டியணைத்தே கல்விச் சாலையில்
சுட்டிடும் நெருப்பில் சுருண்டதே !
கன்னல் செல்வங்கள் கருகிடும்வேளை
என்னநினைத்து எரிதீயில் வெந்ததோ
சதைகொடுத் துயிர்கொடுத்த ” அம்மா ” என்ற
சொல்கூறி சேல்விழிகள் மூடியதோ?
பாதம்பட வேண்டும் குடந்தையில்நம்
ஏதம்முழுதும் எட்டிப்போகும் எனக்கூறும்
வேதவினாயகர் கோயில்வாசலில் நெஞ்சின்
ஓதையுடன் மண்தூவினாள் ஓர்மாதா !
தினந்தோறுமுனை தெய்வமென கும்பிடடுத்தானே
தேனூறும்என் செல்வத்தைப் பள்ளியிலே
கல்விக்கண் திறக்க கைவிட்டுவந்தென்
அல்லிமலர் கண்களையே அவித்தாயே !
கண்ணில்லையா உனக்கு ! இல்லை
புண்ணாகிவிட்டதா மக்களைக் காப்பதற்கு
தெருவுக்குத்தெரு சக்கரபாணி- சாரங்கபாணி
உருவாக கும்பேசுவரர் நாகேசுவரர்
இத்தனை சாமிகளும் இருந்தென்ன ?
முத்தான பிஞ்சுகளைக் காக்க முடியலயே
சித்திரை நிலவாய்சிரித்துச் சென்றவர்கள்
பத்தியதீயில் பதறிப்பதறி உருக்குலைந்தனரே!
” கல் ” என்றே அனுப்பிய கண்மணிகள்
கல்மனத்தார் செயலால் கனலில்எரிந்தனரே
முந்தித்தவமிருந்து முன்னூருநாள் சுமந்து
செந்தீக்கு இரையாக்கத் தானோ ?
குந்தியிருக்கும் தெய்வங்களே எங்கள்
சந்ததிகளை வெந்தனலிலிட்டது சரியா ?
ஆடிவெள்ளி உங்களை ஆராதனைசெய்து
பாடிஉணவுப் படையல் படைக்க
தலைவாழை இலையெடுத்து வந்தோம்
தலையெடுத்த மகனையதில் சுருட்டவைத்தாயே !
குடந்தையிலே மாமாங்கம் நடத்தினோமே
கும்பேசுவரரே குழந்தைகள் சாவுக்கு
உடந்தையாகிப் போனீரோ ? உண்மையெனில்
கடைந்தெடுத்த கற்சிலைதான் கடவுள்அல்ல !
வருங்காலம்கூறி வகையாகத் தொகையை
பெரும் பொருளாய்ச் சேர்க்கும்
ஆரூடக் காரர்களே ! ஆன்மீகவாதிகளே
சிறுமலர்கள் கருகப்போவது தெரியாதா ?
கொள்ளையடிப்போரும் கொலைகள் செய்வோரும்
மணவரங்கம் பிணவரங்கம் ஆகியதே !
படுத்துக்கொண்டே நிகழ்வைப் பார்த்தது போதாதா?
அடுத்த நிகழ்வைத் தொடுத்தாரா?
கொடுத்திட்ட முத்தச்சுவடிருக்க குழந்தைகளை
சுடுதீயில் சுட்டெரித்தநீயும் தெய்வச்சுடரா?
பெற்றோருக்கு கொள்ளியிடுவர் பிள்ளைகள்
உற்றநிகழ்வு நாட்டில் உண்டு;ஆனால்
பெற்றோரே மக்களுக்கு கொள்ளியிடும்
பெருங்கொடுமை கும்ப கோணத்தில் !
முத்தங்கள் பலகொடுத்த முத்தங்கள்
மொத்தமாகக் கருகிச் செத்திட்ட
நிலைகண்டும் காணாதிருக்கும் சிலைகளே
இலைநீங்கள் என்றுமெங்கள் இதயத்தில் !
சாவின் சன்னதியிலே….சின்னதுகள் கூற்று !
குற்றம் என்னசெய்தோம் குடந்தையின்
முற்றாக நிறைந்திருக்கும் தெய்வங்களே
அற்றம்காக்கும் அறிவுபெற அறிவாலயம்ஏகி
கற்றுத் துலங்கச்சென்றது குற்றமா ?
குற்றம்தான் என்றால் குடந்தைமக்களே
முற்றும்கற்ற முத்தமிழ்ப் புலவர்களே
சுற்றியிருக்கும் தெய்வங்களே குற்றவாளிகளென
சற்றும் தயங்காது சாற்றுகின்றோம் !
(கடந்த 16–07–2004 அன்று கும்பகோணத்துப்
பள்ளியின் 94 மழலைகள் செந்தழலைத்
தழுவிச் செத்தார்கள் என்ற சேதி கேட்டு என்
சிந்தை அழுது எழுதிய 94 வரிகள் )
ilayavan-jeya (ma. kanthaiyaa )