மலேஷியாவில் முதுகுளத்தூர் வாலிபர் கொலை : குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெற்றோர் கலெக்டரிடம் மனு
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் ராமநாதபுரம் ஆட்சியரை திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சந்தித்து புகார் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் ஜின்னா. இவரது மனைவி ருஸ்தூன் பீவி. இவர் தனது கணவருடன் ஆட்சியரை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சாகுல்ஹமீது (41) மலேசியாவில் குவாந்தன் பாகங் என்ற இடத்தில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் என் மகன் கடந்த 27.6.2015 அன்று உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக போலீஸார் கண்டுபிடித்திருப்பதாக உணவக உரிமையாளர் தாஜூதீன் மலேசியாவிலிருந்து தகவல் தெரிவித்தார். என் மகன் ஏன் கொலை செய்யப்பட்டான், கொலை செய்தார்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. எனவே எங்களது மகனின் மரணம் குறித்து வெளியுறவுத் துறை மூலம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவித்துள்ளார்.