பைக் மோதி பெண் படுகாயம்: ஒருவர் கைது
முதுகுளத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது பைக் மோதியது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக ஆர்.எஸ்.மங்களம் அருகே உள்ள வலம்மாதூரைச் சேர்ந்த வேலு மகன் கதிர்வேல் (37) வந்த பைக் மோதியது. இதில் பாண்டியம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து பாண்டியம்மாளின் உறவினர் மாரியம்மாள், முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் சார்பு ஆய்வாளர் ஜான்சிராணி வழக்குப் பதிந்து கதிர்வேலை கைது செய்தார்.