மெல்லினம் – நாவல் – மின்னூல் – பா. ராகவன்
மெல்லினம் – நாவல்
பா. ராகவன்
வெளியீடு – http://freetamilebooks.com
மின் நூல் ஆக்கம், மூலங்கள் பெற்றல் – GNUஅன்வர்
ஒருங்குறி மாற்றம்: மு.சிவலிங்கம்
மின்னஞ்சல்: musivalingam@gmail.com
உரிமை -Creative Commons Attribution-Noncommercial-No Derivative License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
ஆறு பாடல்கள், மூன்று சண்டைக் காட்சிகள், ஒரு கற்பழிப்புக்காட்சி, பெண்களைக் கதறியழ வைக்கக்கூடிய சில பிரத்தியேகக் காட்சிகள், ஒரு தனி நகைச்சுவை டிராக், உச்சபட்சமாக ஒரு நீதிமன்றக் காட்சி ஆகியவற்றுடன் ஒரு முழுநீளத் திரைப்படத்துக்கான திரைக்கதை தயாராகிக்கொண்டிருந்தது. திரைக்கதை அமைப்பில் பங்குபெற்றிருந்தவர்களுள் சிலர் என் நண்பர்கள் என்கிறபடியாலும் படத்தின் தயாரிப்பாளர் என் மிக நெருங்கிய நண்பர் என்பதாலும், மேற்சொன்ன default அம்சங்களுடன் மூலக்கதையாக என்னவாவது ஒன்றை எழுதித்தரும்படி என்னைக் கேட்டார்கள். அதற்கு முன் படத்துக்கு அழகாக ஒரு டைட்டில் சொல்லவும் கேட்டார்கள். கதைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம் இருந்தாகவேண்டிய அவசியமெல்லாம் இல்லை என்பதால் முதலில் ‘மெல்லினம்’ என்கிற தலைப்பைச் சொல்லிவிட்டுப் போய்விட்டேன். பிறகு ஏதோ ஒரு கதையும் சொன்ன ஞாபகம் இருக்கிறது. அந்தக் கதை நினைவில்லை.
ஆனால் அந்தத் தலைப்பு பிறகு தனக்கான சரியான கதையை எழுதச் சொல்லி என்னை நீண்டநாளாக வற்புறுத்திக்கொண்டிருந்தது. அந்தத் திரைப்படம் பல காரணங்களால் வெளிவராமல் போனதும் ஓரெல்லைவரை இதற்கான தூண்டுதலாக இருக்கலாம்.
மெல்லினம் நாவலின் சுருக்கத்தை நான்கு வரிகளில் கல்கி ஆசிரியர் திருமதி சீதாரவியிடம் சொல்லி, எழுதட்டுமா என்று சென்ற ஆண்டு மத்தியில் கேட்டேன். ஒரு சம்பிரதாயத் தமிழ்த் தொடர்கதைக்கான எவ்வித லட்சணமும் இல்லாமல் – குறைந்தபட்சம் ஒரு கதாநாயகன், நாயகி கூட இல்லாமல் – வெறும் நாய், குரங்கு, அணில், பட்டாம்பூச்சிகளையும் ரெண்டு பொடிசுகளையும் வைத்துக்கொண்டு, மிகவும் நுணுக்கமானதொரு பிரச்னையைக் கையாளக் கூடியதாக இருந்தது அக்கதை.
ஒரு பேச்சுக்குத்தான் கதை என்கிறோம். வாழ்வின் அனுபவச் சாறில்லாத எந்தப் படைப்புதான் காலத்தின்முன் நின்றிருக்கிறது? கதையில் இடம்பெறும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே என்கிற முன்னெச்சரிக்கை வரிகளைப்போலொரு முழுப்பொய் வேறெதுவும் இருந்துவிடமுடியாது என்று திடமாக நம்புகிறேன். நல்ல படைப்பொன்றின் ஆகச்சிறந்த அடையாளம், அது உண்மையை மட்டுமே பேசும்.
இந்த நாவலில் என் ஒரே சந்தோஷம், நான் முற்றிலும் உண்மைக்கு விசுவாசமாக இருந்திருக்கிறேன் என்பது. வார இதழ் தொடர்கதையிலும் இது சாத்தியம் என்பது மீண்டும் கல்கி மூலம் தான் நிரூபணமாகியிருக்கிறது. திருமதி சீதாரவிக்கு என் மனமார்ந்த நன்றி.
பா.ராகவன்
பதிவிறக்க*