கண்ணியக் காவலர் காயிதெ மில்லத் !

Vinkmag ad

கண்ணியக் காவலர் காயிதெ மில்லத் !

-கவிஞர் அதிரை கலாம்

 

காயிதெ மில் லத்திஸ்மா யில்சா ஹிப்தான்

கண்ணியத்தின் காவலராய் என்றும் நின்றார்

ஆயிரமாம் அரசியலார் யார்தாம் தூய்மை

ஆருமுண்டோ இவரைப்போல் சொல்லில் வாய்மை

தாயிடம்தான் குழந்தைகளும் பாதுகாப்பு

தாய்ச்சபையில் சமுதாயம் என்றும் சேர்ப்பு

பாயிரங்கள் பாடியிவர் புகழை யாரும்

பாடி முடிப் பவர்பாரில் உளரோ கூறும்?

 

சமுதாயச் சிந்தனைகள் மட்டு மன்றி

சந்தனம்போல் மணக்கின்றதமிழைப் போற்றி

அமுதான நற்றமிழை நடுவண் ஆட்சி

அரங்கத்தில் உயர்வாகப் பேசும் மாட்சி

சமமான உரிமைகளை எமக்கு வேண்டி

சமதர்மம் மேலோங்க உரையில் தூண்டி

எமதாண்மை நாடறியச் செய்த வீரர்

எழுச்சியுடன் சமுதாயத் தொண்டில் தீரர் !

 

தொகுதியிலே வாக்குகளைக் கேட்க வில்லை

தொடர்ந்ததனைத் தக்கவைத்த புகழின் எல்லை

மிகுதியான வாக்குகளில் தொடர்ந்து வெல்லும்

மேன்மையைத்தான் பாரெங்கும் புகழைச் சொல்லும்

பகுதியாக இயக்கங்கள் இருந்தும் இன்றே

பறைசாற்றும் கேரளத்தில் மகான் என்றே !

தகுதியான வேட்பாளர் இவர்தாம் என்று

தவப்பேறு பெற்றுவிட்ட தொகுதி என்றும் !

 

சீனப்போர் வந்தபோழ்து தயக்கம் இன்றிச்

சிப்பாயாய்த் தனயனையே தியாகம் செய்யத்

தானமாகத் தந்திடவும் துணிந்த சீலர்

தலைவரைப்போல் எவரின்று நாட்டில் உளர்?

வானம்போல் விரிந்தமனம் பெற்று வென்றார்

வாழ்நாளில் எளிமையுடன் பற்றி நின்றார்

மானம்போல் பெரிதினும் பெரிதாய் இஸ்லாம்

மார்க்கத்தைப் பேணிவந்த தூய முஸ்லிம் !

 

( இனிய திசைகள் – ஏபர்ல் 2015 )

News

Read Previous

EIFF ஷார்ஜாவில் நடத்தும் மக்கள் சங்கமம்

Read Next

நபிவழித் திருமண (நிக்காஹ்) நிகழ்ச்சி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.