மகளிர் நோய்கள் !

Vinkmag ad

மகளிர் நோய்கள் !

பெண்களின் உடலில் தைராய்டு சுரப்பி குறையும். குறைந்தால் உடல் பருமன் ஏற்படும், தலைமுடி கொட்டும். சிலருக்கு தைராய்டு சுரப்பு அதிகமாகும். அதிகமானால் உடல் இளைக்கும், படபடப்பு, வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றைத் தவிர்க்க தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தைராய்டு பாதிப்புகளை மருந்து, மாத்திரைகளால் 100 சதவிகிதம் குணப்படுத்தலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் :

உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. வைரஸ் தொற்று நோய் கிருமியால் ஏற்படும் இந்தப் புற்றுநோய் தாக்குதலைக் கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வே காரணம். எனினும் 3 ஆண்டுக்கு ஒரு முறை 55 வயது வரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 55 வயதிற்குப் பிறகு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்பில்லாததால் அதற்குப் பின்னர் பரிசோதனைகள் தேவையில்லை. 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தைராய்டு, கர்ப்பப்பை புற்றுநோய், எலும்பு பலவீனம், மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளது. இதை முன்கூட்டியே உரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தால் பாதிப்புகளைத் தடுக்கலாம்.

எலும்பு பலவீனம் :

மாதவிடாய் (மெனோபாஸ்) பிரச்சனைகளால் மனநிலை மாற்றம், உடல் வலி ஏற்படும். அப்போது எலும்பு பலமிழக்கும், தேய்மானம் ஏற்படும். அதைக் கண்டறிய எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்ய வேண்டும். இது பாஸ்மியர் டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. இதன் மூலம் கால்சியம் குறைபாட்டைக் கண்டறிந்து சரி செய்யலாம். எலும்பு முறிவு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் :

மார்பகப் புற்றுநோய் தாக்கும் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால் மேமோக்ராம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ஹார்மோன் பாதிப்புகளால் ஏற்படும் இந்நோயைக் கண்டறிய அதிகபட்சம் 3 ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் மார்பகப் புற்றுநோயைத் துவக்கநிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளலாம். 55 முதல் 60 வயதிற்குப் பிறகு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது குறைவதால் அதற்குப் பிறகு பரிசோதனை செய்ய வேண்டியதில்லை. மேலும் உடல் பருமனுள்ள, மன அழுத்தமுள்ள பணியில் இருக்கக்கூடிய இரத்தக் கொதிப்பு, இரத்தக் கொழுப்பு உள்ளவர்கள் நீரிழிவு, இதய பாதிப்பு உள்ள சந்ததியைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். நோய்களைத் துவக்க நிலையிலேயே கண்டறிந்தால் சரி செய்யலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சூலக நீர்க் கட்டி :

ஒரு காலத்தில் ஏதோ ஒரு சில பெண்களுக்கு இருந்த சூலக நீர்க்கட்டி பிரச்சனை தற்போது பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்சனையாகிவிட்டது. சூலக நீர்க்கட்டி என்பதை ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம் என்று கூறுகின்றனர். ஓவரி என்பது பெண்களின் சூலகமாகும். இதில் உருவாகும் முட்டைகள் தாம் கருவாகி, கருப்பையில் குழந்தையாக வளர்கிறது. இந்தச் சூலகத்தில் நீர் நிரம்பிய ஒன்று அல்லது அதிகமான கட்டிகள் இருப்பதைத்தான் சூலக நீர்க் கட்டி என்று சொல்கிறார்கள்.

இந்தப் பிரச்சனை பொதுவாக நிறையப் பெண்களுக்கு இருந்தாலும், இவற்றில் சில பெரிதாக எந்தப் பிரச்சனையும் செய்யாமலே இருந்து விடுகிறது. குழந்தைப் பேற்றின் போது தானாகவே மறைந்து போகும். நீர்க்கட்டிகளும் உள்ளன. சில பெண்களுக்கு இந்த நீர்க் கட்டிகளால் மாதவிலக்கில் தாமதம், குழந்தைப் பேற்றில் தாமதம் போன்றவை ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரித்தல், முகத்தில் பரு போன்றவையும் இதன் அறிகுறிகளாக உள்ளன.

இந்த நீர்க்கட்டிகளைப் பொறுத்தவரை எளிதான சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து மாத்திரைகளிலேயே குணப்படுத்தும் கட்டிகளும் உள்ளன. சில சிறிய அறுவை சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தும். கட்டிகளும் உள்ளன. ஆனால், எவ்வளவு விரைவாக இதற்கு சிகிச்சை எடுக்கிறோமோ அவ்வளவுக்கும் எளிதாக நிவாரணம் பெறலாம்.

மாதவிடாய் தள்ளிப் போவது, ஒரு வருடத்துக்கு எட்டுக்கும் குறைவான மாதவிடாய் போன்றவை இருக்கும் இளம் பெண்களை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது பிற்காலத்தில் ஏற்படும் மலட்டுத் தன்மையைத் தவிர்க்க உதவும்.

எனினும், இந்த நீர்க்கட்டி இருந்தாலே மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதைக் கூறமுடியாது. நீர்க்கட்டிகள் இருந்தாலும் எந்தச் சிக்கலும் இன்றிக் குழந்தைப் பேறு உண்டானவர்களும் பலர் உள்ளனர். எனவே, இது பற்றிப் பயப்படாமல், இது ஒரு சிறிய பிரச்சனை என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைப் பெறுவது சிறந்தது.

 

( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 )

News

Read Previous

துபாயில் பெண்களுக்கு இலவச மன நல ஆலோசனை

Read Next

துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்

Leave a Reply

Your email address will not be published.