நான் பெண்மக்களின் தந்தை !
நான் பெண்மக்களின் தந்தை !
-ஏம்பல் தஜம்முல் முகம்மது
அன்னையர் காலடியில்
அடைய அரும் சொர்க்கத்தை
முன்னிறுத்திக் காட்டியஎம்
முஹம்மதுவே நாயகமே !
உற்றாரில் உறவினரில்
ஊருலகில் தாய்தானே
முற்றமுதற் சுற்றமென
முன்மொழிந்த நாயகமே !
பெண்மகவைப் பெற்றதுடன்
பேணிவளர்த்(து) ஆளாக்கும்
புண்ணியத்தார் சொர்க்கம்
புகுவர் என்ற நாயகமே !
பெண்ணிற்கும் கல்வி
பெறுவதொரு கடமையென
மண்ணுலகில் முன்னுரைத்த
மாமணியே , நாயகமே !
விதவையெனவே மக்கள்
வெறுப்பவரை அன்னையராய்
மதிப்பளிக்கச் செய்தபுது
மாண்பாளர் நாயகமே !
அமல்களுக்கு நற்கூலி
ஆணெனினும் பெண்ணெனினும்
சமம் என்றவரலாற்றைச்
சாதித்த நாயகமே !
மண்ணிற் புதைத்தவர்க்கு
மத்தியிலே, நான்தந்தை
பெண்மக்களுக் கென்றே
பெருமைகொண்ட நாயகமே !
( இனிய திசைகள் – ஏப்ரல் 2015 இதழிலிருந்து )