வாழ்க்கை, ஒரு கனி

Vinkmag ad

வாழ்க்கை, ஒரு கனி

– அன்பு ஜெயா

 

மொட்டொன்று காலையில் மலராகி மாலையில்

முழுமையாய்க் கனிவ தைப்பார்,

முழுதான கனியுமே முந்நாளைப் போலவே

முத்தான வித்தாவ தைப்பார்,

முத்தான வித்துமே சொத்தாகி யுனக்குமோர்

முதுமையைத் தருவ தைப்பார்,

முதுமையைத் தந்தபின் முந்நாளின் நினைவுமே

மூள்கின்ற கோலத் தைப்பார்,

சொத்தான சிந்தனை சுழல்கின்ற போதிலே

சுகவீனம் சேர்வதைப் பார்,

சுகமான வாழ்வுமே சுமையாக மாறியே

சுழலுவதைப் பாரு நீயே. (1)

 

நேற்றிந்த வாழ்விலே நீபெற்ற இன்பமும்

நில்லாமல் போவ தைப்பார்,

நிழலாடும் துன்பமும் நிம்மதியை வென்றபின்

நீயிங்கு மாள்வ தைப்பார்,

ஊற்றாகி வந்திடும் ஒர்பிறவி மேலுமே

உன்வாழ்வு தொடர்வ தைப்பார்,

உன்பிறவி ஓயுமுன் உண்மையினை நாட்டியே

உன்கடமை ஆற்றி டப்பார்,

காற்றாகி வந்திடும், கடுகியுனைச் சேர்ந்திடும்

கூற்றுவனின் கட்ட ளைப்பார்,

கமழ்கின்ற வாழ்வுமே கனியாக மாறிடக்

கைங்கர்யம் செய்க நீயே. (2)

 

 

ஆண்டாண்டு மாடிடும் ஆசைநிறை வாழ்வினை

ஆண்டவன்தாள் சேர்த்தி டப்பார்,

அவன்தாளைச் சேர்ந்ததும் ஆன்மாவின் தூய்மையை

அனுபவித் தறிந்தி டப்பார்,

தானென்ற ஆணவம் தவிர்த்திந்த வாழ்வினில்

தரமதனில் உயர்ந்தி டப்பார்,

தாயன்பின் மேன்மையைத் தப்பாது கண்டபின்

தாய்மையினைப் பணிந்தி டப்பார்,

காணென்று இறைவனும் காண்பிக்கும் வாழ்வினைக்

கனியாகக் கண்டி டப்பார்,

கனியொத்த வாழ்விலே கண்டதென்ன ஆன்மமே

கடவுளினைச் சேர்க நீயே.        (3)

———————————————————

News

Read Previous

440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்

Read Next

நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர்

Leave a Reply

Your email address will not be published.