சகலருமே வேண்டிநிற்போம் !
சகலருமே வேண்டிநிற்போம் !
( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் )
மன்மத வருடமதை மனமகிழ வரவேற்று
துன்மதி போயிடவே துதுத்துமே கடவுளைநாம்
பன்முறை வணங்கிநின்றால் பலநன்மை வந்துவிடும்
என்னினிய நண்பர்காள் இவ்வண்ணம் செய்திடுவீர் !
புதுவருடம் எமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடட்டும்
எமதுளத்தில் என்றென்றும் எழுந்திடட்டும் நல்லெண்ணம்
தமதுயிரால் எமைவாழ வைத்துநிற்கும் பெரியோரை
தானினைத்து அவர்பாதம் தனைவணங்கி நிற்போமே !
நல்லவைகள் ஆற்றவெண்ணி நாமென்றும் நினைத்திடுவோம்
அல்லவைகள் புறந்தள்ளி உள்ளமதைத் திருத்திடுவோம்
உள்நுழையும் கள்ளமெலாம் உருக்குலையச் செய்துநிற்போம்
நல்லவரின் அறிவுரையை நாம்கேட்டு நடந்திடுவோம் !
கோவில்சென்று கும்பிடுவோம் குறையகல வேண்டிடுவோம்
கோபமெனும் கொடுநெருப்பை குளிர்விக்க முயன்றிடுவோம்
சாபமிடும் பேய்க்குணத்தை சம்காரம் செய்திடுவோம்
சன்மார்கம் மனத்திலெழ சகலருமே வேண்டிநிற்போம் !