தமிழக நூலகங்கள் – மு. இராமனாதன்
தமிழகத்தில் 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராம நூலகங்கள், 539 பகுதிநேர நூலகங்கள், ஆக 4,042 நூலகங்கள் உள்ளன.
இவை தவிர, சென்னையில் கன்னிமாரா நூலகமும் அண்ணா நூலகமும் உள்ளன. தமிழகமெங்கும் மக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10% நூலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது; இது ரூ. 300 கோடி வரும் என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. நூலகங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும்.
நான் படித்த ‘பொன்னியின் செல்வன்’ ஆதிப் பதிப்புக்கு முன்னுரை எழுதியிருந்தவர் ராஜாஜி. சுருக்கமான அந்த முன்னுரை ஐந்து பாகங்களிலும் இடம்பெற்றிருக்கும். அதில் ராஜாஜி இப்படிச் சொல்லி யிருப்பார்: “காகிதமோ, அச்சோ, படமோ, பெயிண்ட்டோ எல்லாமே மிக நேர்த்தியாகச் சேர்த்து இந்த வெளியீட்டை உன்னத ஸ்தானத்தில் அமர்த்தியிருக்கின்றன. ஒரே ஒரு குறை, நம்முடைய ஆர்வங்கொண்ட படிப்பாளிகள் எல்லாருமே ஏழைகள். பெரும் தொகை போட்டுப் புஸ்தகத்தை வாங்க வெகு சிலரே முன்வருவார்கள். அதனால், நூல்நிலையங்களில் வைத்துப் பலரும் படிக்கச் செய்யலாம்.”
மு. இராமனாதன்,
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
நன்றி : தி இந்து