ஆனந்தம்!

Vinkmag ad
கவிதை எனக்கோர் ஆனந்தம்! 
பசுபதி
கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை

 

உண்மை ஒளிர வேண்டுமென்ற
உறுதி யுடன்தான் உட்கார்வேன்;
வண்ணப் புனைவும் உணர்ச்சியையும்
மண்டை முழுதும் தேடிடுவேன்;
எண்ணப் பரியோ சண்டிசெய்தும்
என்னைத் தள்ளிப் பரிகசித்தும்
கண்ணா மூச்சி ஆடினுமே
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (1)

வேலன் மீதோர் படைதொடங்கி
மேலும் சங்கம் ஈந்தனபோல்
மாலைப் போற்றி ராமகதை
மாலை தொடுத்த கம்பனைப்போல்
பாலில் மூன்றும் சிலம்புமெனப்
பாடி மகிழ்ந்த பாரதிபோல்
கால வெள்ளம் கரைக்காத
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (2)

சந்தம் என்னும் பொக்கிடத்தைத்
தந்து தமிழ்க்கு வளம்சேர்த்த
எந்தை அருண கிரிநாதர்
எடுத்து ரைத்த அவிரோதம்
சிந்தை தன்னை அவ்வழியில்
தினமும் சுண்டி இழுப்பதனால்
கந்தன் புகழைப் பாடுமந்தக்
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (3)

சின்னஞ் சிறிய வயதுமுதல்
சிறந்த பாடல் பலவற்றை
இன்னி சையாய்க் கேட்பதுதான்
இன்பம் என்று நினைத்தாலும்
கன்னல் தமிழைக் கந்தலெனக்
கன்னா பின்னா எனக்குதறிக்
கன்னம் குழியப் பேரன்சொல்
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (4)

பசப்புச் சொல்பச் சோந்தியெனப்
பதவி பெற்ற பின்தேசம்
நசித்துப் போகும் வழிதனிலே
நாளும் நடத்தும் அரசினர்மேல்,
நிசத்தை மறைத்து முழுங்காமல்
நேர்மை யுடனே பயமின்றிக்
கசையைச் சொடுக்கிச் சிலர்தீட்டும்
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (5)

மனதின் ஆழ்ந்த தடாகத்தில்
மறைந்து கிடக்கும் நிழலொன்று
தனிமை என்னும் கல்லடியால்
தருணம் பார்த்துத் தலைதூக்கும்;
புனைவும் உணர்வும் இசைபாடும்;
புதிய மயக்கம் ஆழ்த்திடுமக்
கனவின் விளிம்பில் உதிக்குமொரு
கவிதை எனக்கோர் ஆனந்தம் ! (6)

*****

News

Read Previous

சென்னை : மணமகன் தேவை

Read Next

அரபி மொழி பயில ……..

Leave a Reply

Your email address will not be published.