மூச்சு திணறல்: 82 ஆடுகள் பலி; முதுகுளத்தூர் விவசாயிகள் சோகம்
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே குடுமங்குளத்தில், குடிலில் அடைக்கபட்ட 31 ஆட்டுகுட்டிகள் மூச்சு திணறியும், மேலப்பண்ணைகுளத்தில், 21 ஆடுகளும், 30 குட்டிகளும் நோய் தாக்கியும் பலியாகின.
கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லாமல் முடங்கி கிடக்கின்றன. இதனால், விவசாயிகள் ஆங்காங்கே உள்ள நிலங்களில் குடில் அமைத்து, மழையிலிருந்து ஆட்டு குட்டிகளை காப்பாற்றி வருகின்றனர். நேற்று முதுகுளத்தூர் அருகே குடுமங்களத்தில், 31 ஆட்டு குட்டிகளை குடிலுக்குள் அடைத்து வைத்து விட்டு, விவசாயி சிவன், 36, மேய்ச்சலுக்காக தனது 60 ஆடுகளை அருகிலுள்ள ரோட்டோரம் அழைத்து சென்றார். திரும்பி வந்து குடிலை திறந்தபோது, அதற்குள் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 31 ஆட்டுக்குட்டிகள், மூச்சு திணறி இறந்து கிடந்தன. இதை பார்த்த சிவன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இறந்த ஆட்டுக்குட்டிகளை கால்நடை உதவி அலுவலர் சந்திரகேசன் பிரேத பரிசோதனை செய்து, புதைக்க உத்தரவிட்டார். மேலக்குளம் ஆர்.ஐ., மதியழகன் பலியான ஆட்டுகுட்டிகளை ஆய்வு செய்தார்.
சிவன் கூறியதாவது: ஆடுகளை மட்டும் நம்பி வாழ்ந்த எனக்கு, 31 குட்டிகள் இறந்தது பெரும் இழப்பு தான். இறந்த எனது ஆடுகளுக்கு உரிய நிவாரணம் கோரி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் முறையிட்டுள்ளேன். அதிகாரிகள் உரிய நிவாரணம் வழங்கி உதவவேண்டும், என்றார்.
மேலப்பண்ணைக்குளத்தில் விவசாயி பரஞ்ஜோதியின் செம்மறி ஆடுகள் அம்மை நோயால் கால்களில் புண் ஏற்பட்டு, நடக்க முடியாமல் மேய்ச்சலுக்கு செல்லவில்லை. இதனால் இரை உண்ணமுடியாமல், ஒரு வாரத்திற்குள் 21 ஆடுகளும், 30 ஆட்டுக்குட்டிகளும் இறந்து விட்டன. அம்மைநோய் தடுப்பு ஊசிகள் உட்பட நோய் எதிர்ப்பு மருந்துகள், ஆடுகளுக்கு செலுத்தியபோதிலும், ஆடுகள் பலியாவதை தடுக்க முடியாமல், விவசாயி பரஞ்ஜோதி கவலையில் உள்ளார்.
அவர் கூறியதாவது: கடந்த சில நாள்களாக கொசுக்கடி உட்பட பல விஷ ஜந்துக்களின் தொல்லையால் ஆடுகள் பாதிக்கபட்டு வருகிறது. இதுவரை 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் பஇறந்து விட்டது கவலையாக உள்ளது. ஆடுகள் இழப்பை தடுக்க இறைச்சிக்காக விற்பனை செய்ய சென்றால், மழை காலங்களில் ஆடுகளின் விலை குறைவாக இருப்பதால், வேறு வழியின்றி பராமரித்து வருகிறோம், என்றார்.