உலகில் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுதும் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மாவட்ட சுகாதாரத்திட்ட அலுவலர், மருத்துவர் வி.சி.சுபாஷ்காந்தி. மாவட்ட சுகாதாரத் திட்டம் சார்பில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தலைமை மகப்பேறு மருத்துவர். எஸ்.ஹையருன்னிஸா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உலக பக்கவாத தினத்தில் பங்கேற்று மேலும் பேசியது:
உலகம் முழுதும் சுமார் 15 கோடி மக்கள் பக்கவாத நோயால் பாதிக்கபட்டுள்ளனர். அதில் 6 கோடி மக்கள் பக்கவாதத்தினால் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 5 கோடி மக்கள் நிரந்தர உடல் செயலிழப்பு அடைந்துள்ளனர். இச்சூழலில் நம்மில் ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இரத்தத்தில் அதிகமான கொழுப்பு சத்து ஆகியவை முக்கிய காரணங்களாகும் இந்த ஆண்டின் உலக பக்கவாத தின கருப்பொருள் “விரைந்து செயல்படுதல்” என்பதாகும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வாய் உள்ளிழுத்தல், முகவடிவமைப்பில் மாற்றம் ஏற்படுதல், கை மற்றும் கால் தசைகள் வலுவிழத்தல், பேச்சு குளறுதல் உள்ளிட்டவை பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். இவை காணப்பட்டால் 108 சேவையை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டும். விரைந்து செயல்பட்ட பிறகு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும், இயன்முறை சிகிச்சைகளுமே தொடர்ந்தால்தான் பக்கவாத நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு எழ முடியும்.
இந்நோய் பாதிப்பு வராமல் இருக்க சீரான இரத்த அழுத்தம் 120-80 இரத்தத்தில் பொதுவான சர்க்கரையின் அளவு 110,வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரையின் அளவு 100, சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு 140-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இரத்தத்தில் மொத்த கொழுப்பின் அளவு 200. அதிகமாகமலும், டிரைகிளிசரைடு கொழுப்பு 180-க்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு வைத்துக்கொண்டால் மட்டுமே பக்கவாத பாதிப்பு வராது.
பக்கவாதத்தை தடுக்க தினமும் 45 நிமிட நடைபயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு உப்பு, எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது அவசியம் என்றார்.
இதையொட்டி பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட் 5 முதல் 10 நோயாளிகளுக்கு தினமும் இயன்முறை பயிற்சி அளித்து உடல்நலத்தை முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர் விக்னேஷ்குமாரைப் பாராட்டி பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் பக்கவாத விழிப்ப்புணர்வு கையேடுகளும் வழங்கப்பட்டன.
இதில், குழந்தைகள் நல மருத்துவர் இராமலிங்கம், செவிலியர் கண்காணிப்பாளர் பானுமதி,மாவட்ட சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநல சங்கத்தலைவர் க.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, மவுன்ட்சீயோன், கீரை தமிழ்செல்வன், திருவரங்குளம் சுகாதார பயிற்சி நிலைய செவிலியர்கள் ‘பக்கவாதமில்லாத பாரினில் வாழ்ந்திடுவோம்’ என உறுதி எடுத்துக்கொண்டனர். இதில், சுமார் 150 நபர்கள் கலந்துக்கொண்டனர். ஏற்பாடுகளை சிறப்பு செவிலியர் ஏ.ஜாஸ்மின் வினோலியா செய்திருந்தார்.