தேவர் குருபூஜை: ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிப்பு
முதுகுளத்தூரில் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆளில்லா விமானத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, தென் மண்டல ஐ.ஐõ. அ.கு. சிங் முன்னிலையில் சோதனை செய்து இயக்கிக் காட்டப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இவ் விழாவில், பல்வேறு அரசியல் கட்சினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர். அப்போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த வகையில், மற்றொரு நடவடிக்கையாக ஆளில்லா விமானத்தில் (தட்ஷா) கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு, அதன்மூலம் கூட்ட நெரிசல், போக்குவரத்து இடையூறு, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை இந்த ஆளில்லா உளவு விமானம் மூலம் கண்காணிக்கலாம்.
இதையடுத்து, டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவின்பேரில் தென்மண்டல ஐ.ஜி. அ.கு. சிங், கோயமுத்தூர் ஐ.ஐõ. அமல்ராஜ், ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் ஆகியோர் முன்னிலையில் முதுகுளத்தூர் காவல் நிலையம் முன் டாக்டர் செந்தில்குமார் ஆளில்லா விமானத்தை இயக்கி சோதனை செய்து காட்டினார்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் கூறுகையில்: தேவர் குருபூஜை விழாவில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக முதுகுளத்தூர், கமுதி, பார்த்திபனூர், பரமக்குடி போன்ற முக்கியமான இடங்களில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் புகைப்படம் மூலம் அறிந்து கொள்ள முதல்முறையாக இந்த முறையைச் செயல்படுத்தியுள்ளோம். பெரும்பாலும் ரஷியா, ஜெர்மன் போன்ற நாடுகளில்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்திய ராணுவத்தினர் எல்லைப் பிரச்னைகளுக்கு ஆளில்லா விமானத்தில் கண்காணிப்புக் கேமராவை பொருத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்டது. இது சுமார் 100 மீட்டர் முதல் 14 ஆயிரம் மீட்டர் தூரம் வரை பறந்து தரையில் என்ன நடக்கிறது என்பதனை நமக்கு தெரிவிக்கும். பறக்கும்போது இதன் செயல்பாடுகளை கணினி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். ஆளில்லா விமானக் கண்காணிப்புக்கு தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அவர் தெரிவித்தார்.