கவிதையில் வாழுகின்றாய் !

Vinkmag ad

கவிதையில் வாழுகின்றாய் !
( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் )

கற்பனைக் கடலுள் மூழ்கி
கணக்கில்லா முத்தெடுத்து
அற்புதக் கவிதை தந்து
அனைவரின் கவிஞ்ஞன் ஆனாய்

சொற்சுவை அனைத்தும் சேர்த்து
சுந்தரத் தமிழில் தந்த
பொற்புடைக் கவிதையாலே
புவியெலாம் புகழுதுன்னை

காவியம் செய்து நின்ற
கவி கண்ணதாசனே நீ
கவிதையால் உலகையாண்டு
காவியம் ஆகி விட்டாய்

ஓவியம் போல  நீயும்
ஒவ்வொரு கவிதை தந்தாய்
பாவிடை தோய்ந்தாய் நாளும்
பாட்டுக்கே அரசனானாய்

ஊரெலாம் உன்னைப் போற்ற
உன்கவி உதவிற்றன்றோ
வாரிநீ தந்து நின்றாய்
வளமுடை தமிழை நாளும்

கார்முகில் போல நீயும்
கவிமழை பொழிந்து நின்றாய்
கவி கண்ணதாசனே நீ
கவிதையில் வாழுகின்றாய்!

News

Read Previous

தியாகமே ஹிஜ்ரத்

Read Next

எழில் நிறைந்த இளமங்கை

Leave a Reply

Your email address will not be published.