தாயாய் மாறி உழைத்து விடு!

Vinkmag ad

தாயாய் மாறி உழைத்து விடு!

 

ஒளியில் உலகம் விழித்தெழுந்தே

ஓடி யாடும் வேளையிலே,

குளித்து, துலங்கும் முகத்தோடு

கூடும் அறிவின் திறத்தோடு,

எளிய மலரின் அழகோடு

ஏற்கும் வாழ்வை வெறுக்கின்றாய்!

துளியும் விரும்பா சோர்வதனால்,

தூக்கம் தழுவித் தொலைக்கின்றாய்!

 

 

உழைப்பின் பயனை உணர்ந்தாலும்,

ஓய்ந்தே நாளைக் கழிக்கின்றாய்!

விழைந்தே செயலை ஆற்றாது,

வீணில் சோம்பித் திரிகின்றாய்!

பிழைத்தல் மட்டும் வாழ்வல்ல,

பீடை பிடிக்கும் எழுந்து விடு!

தழைக்கும் மனித குலத்துக்கு,

தாயாய் மாறி உழைத்து விடு!

 

விதைக்கும் காலம் உறங்கிவிட்டால்,

வதைக்கும் காலம் ஒன்றுவரும்!

சிதைக்கும் உறுதி தனைக்களைந்து,

தீதாம் உறக்கம் கலைத்துவிடு!

உதைக்கும் வயது கடந்ததனால்,

உண்மை இங்கே உரைக்கின்றேன்.

பதைக்கும் மனத்தைப் புரிந்துகொண்டு,

பாங்காய் நடந்து மகிழவிடு!

 

தலைவன் எனவே நீநடந்தால்,

தொலையும் மக்கள் துன்பமெல்லாம்!

அலைபோல் ஆடும் வாழ்வினிலே,

ஆளும் வழியைக் காட்டிடவே

நிலையாய்  நின்று செயலாற்றும்

நீண்ட கடமை உனக்குண்டு!

விலையாய் நீயும் உன்தூக்கம்,

விட்டே ஒழித்து புறப்படுக!

                                       – திருமதி சிமோன் 

 

News

Read Previous

சீனி என்னும் அரக்கன்….

Read Next

துபாயில் கதை கேட்க ………….

Leave a Reply

Your email address will not be published.