ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா
ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தவுள்ளன. இதனை முன்னிட்டு ஆட்சியர் க.நந்தகுமார் விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டார்.
விழாவில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைத்தல், பாரம்பரிய உணவு வகைகள், உணவுக்கூடம் அமைத்தல், தினசரி கலைநிகழ்ச்சிகள், சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள், விழா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்குகள் அமைத்தல், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இப்புத்தகத் திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வகையான புத்தகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு, விற்பனையும் செய்யப்படவுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் விலைச்சலுகை உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்பட உள்ளது. ஆய்வின் போது கலை இலக்கிய ஆர்வலர் சங்கத் தலைவர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா, செயலர் டாக்டர்.ஆர்.வான்தமிழ் இளம்பருதி, ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் அறங்காவலர் குமரன் சேதுபதி, வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், அரசு அலுவலர்கள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.