மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
முதுகுளத்தூரில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் தேர்தலை முன்னிட்டு முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் முதுகுளத்தூரில் கொடி அணிவகுப்பு நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை போலீஸார் அணிவகுப்பாகச் சென்றனர்.
அணிவகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் ராமமூர்த்தி, முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் சதீஸ், கடலாடி இன்ஸ்பெக்டர் மோகன், சார்பு ஆய்வாளர்கள் சரவணன், செந்தில்குமார், ஜெயக்குமார் மற்றும் முதுகுளத்தூர்,கடலாடி,தேரிருவேலி ஆகிய காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸார் கலந்து கொண்டனர்.