இதழியல் செம்மல் இலக்குவனார்

Vinkmag ad

 

இதழியல் செம்மல் இலக்குவனார்
–       இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
முன்னுரை
  தமிழ்க்காப்புத் தலைவர், செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் என்பன முற்றிலும் தமிழ்நலனுக்காக அவர் சந்தித்த போர்க்களங்களே ஆகும். போர்க்களத்தில் அவர் அடைந்த வெற்றிவாகைகள் என்பன தமிழ், தமிழர் பெற்ற பயன்களாகும். அவர் சந்தித்த ஏமாற்றங்கள் என்பன தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகும்.
களப்பணியில் இதழ்ப்பணி
  தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் தமிழாக வாழ்ந்த பேராசிரியரின் பணி கல்விப்பணியுடன் இணைந்த களப்பணியாக அமைந்தது. களப்பணி என்பது, இலவசத் தமிழ்க்கல்வி, தமிழ் இலக்கியப்பரப்புரை,தமிழ்நலப் போராட்டங்களை நடத்துதல் முதலான பலவாகும். இத்தகயை களப்பணியில் குறிப்பிடத்தக்க இடம்  பெறுவது பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் இதழியல் பணியாகும். பெருஞ்செல்வந்தர்களும் நாளிதழ் நடத்த அஞ்சும் காலத்தில் தமிழ்நலனுக்காகவே குறள்நெறி என்னும் நாளிதழ் நடத்தினார் என்பதே அவரது பெருமைக்குச் சான்றாகும்.
இதழ்கள் வழி இலக்கியப் பரப்புரையாளர்
  பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் பத்து ஆங்கில நூல்களையும் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும் படைத்தளித்துள்ளார். இவை யாவும் தமிழ் இலக்கியங்கள் மீது சிலரால் வேண்டுமென்றே படியவிடப்பட்ட ஆரியக் கறைகளை அகற்றுவனவாகவும் பொய்மைப் புனைந்துரைகளை நீக்குவனவாகவும் தமிழின் தொன்மையையும்  மேன்மையையும் வண்மையையும் நுண்மையையும் தாய்மையையும் தூய்மையையும் வெளிப்படுத்துவனவாகவும் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு வரலாற்றுச் சிறப்புகளை உலகிற்கு அறிவிப்பன வாகவும் அமைந்தவை. எனவே, தமிழின எழுச்சியை ஏற்படுத்த  இவ்வாராய்ச்சி நூல்களும் விளக்க நூல்களும் பேராசிரியர் அளித்த கருவிகளாய்  அமைந்தன. ஆனால் இவரது புலமை மிகு கருத்துகள் உயர்நிலையில் படிப்போரிடையே மட்டுமல்லாமல் எளிய மக்களையும் சென்று சேர்வதற்கு அவரின் இதழ்ப்பணி சிறப்பான ஊடகமாக அமைந்தது.
இலக்கியங்களை மக்களிடையே பரப்பிய மாமனிதர் 
  பேராசிரியரின் இதழ்ப்பணிகளால் தமிழ் இலக்கியங்கள்  புலவர்கள் மட்டுமே படித்தற்குரியன என்னும் தவறான எண்ணம் விலகியது. இவை வாழ்வியல் இலக்கியங்கள்; தமிழராய்ப் பிறந்த ஒவ்வொவரும் கட்டாயமாக அறிய வேண்டியவை; பழந்தமிழர்களின் பன்முகச் சிறப்பு களையும் நமக்கு உணர்த்தி இன மான உணர்வுகளை ஊட்டுபவை என அனைவரும் உணர்ந்தனர். எனவே,பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் செய்தி ஊடகத்தைக் கருவியாகக் கொண்டு தமிழ் இலக்கியங்களை மக்களிடையே பரப்பிய மாமனிதராய் விளங்கினார் எனலாம்.
செய்தி இதழ்களுக்கும் இலக்கியத் தகுதி அளித்தவர்
  பேராசிரியரின் இதழ்ப்பணி அவரது கள வாழ்வை எளிமைப்படுத்தவும் மக்களிடையே பரப்பி ஈர்க்கவும் சிறப்பானதொரு பங்களிப்பை வழங்கியது எனில் மிகையாகாது. தகவல் தொடர்பு ஊடகமான இதழ்களின் வாயிலாகப் பேராசிரியர் அவர்கள் தமிழுலகத்தினரைத் தட்டி யெழுப்பவும் ஆற்றுப்படுத்தவும் இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்யவும் இனமானத்துடன் திகழச் செய்யவும் சிறப்பாகப் பணியாற்ற முடிந்தது. வெறும் பேராசிரியராகவோ நூலாசிரியராகவோ சொற்பொழிவாளராகவோ  தமிழ்த் தொண்டராகவோ மட்டும்  இல்லாமல் தமிழ்க்காப்புத் தலைவராகப் பேராசிரியரைத் திகழச் செய்ததில் அவர் நடத்திய இதழ்களுக்குப் பெரும் பங்கு உண்டு. தமிழ் இலக்கிய வளங்களை மக்களிடையே சேர்த்து மக்கள் இலக்கியங்களாக அவற்றை மாற்றச் செய்யவும் இதழ்களுக்கு இலக்கியத் தகுதி கிடைக்கச் செய்யவும் பேராசிரியரின் அரும் பெரும் முயற்சிகள் வழி வகுத்தன. இந்தி எதிர்ப்புப் போரில் மாணாக்கர்களையும் பொது மக்களையும் ஈடுபடச் செய்து அதனை மக்கள்  போராக மாற்றப் பேராசிரியரின் இதழ்ப்பணியே பெரும் பங்காற்றியது. எனவே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் இதழ்ப்பணிகளை நாம் அறிவது அவரது அயரா முயற்சிகளையும் அருந் தொண்டுகளையும் அறிய வாயிலாக அமையும்.
 மாணாக்க நிலையில் இதழியல் ஈடுபாடு
 பேராசிரியர் அவர்கள் பள்ளி மாணாக்கராய்த் திகழ்ந்த போதே எழுத்திலும் பேச்சிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். பள்ளியில் நடைபெறும் விழாக்கள், சிறப்பு நிகழ்வுகளின் பொழுதும் மலர்களிலும் கவிதைகள் எழுதித் தன் எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டார். திருவையாற்று அரசர் கல்லூரியில் புலவர் பட்டத்திற்குப் பயிலும் பொழுது குடியரசு, இந்து நேசன், தமிழ்ப் பொழில் முதலான இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இதழுலகில் அடியெடுத்து வைத்தார். மாணவ நிலையில் இல்லாமல் ஆராய்ச்சியாளர் நிலையில் இவரது கட்டுரைகள் அமைந்தமையால் இவையாவும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாக இவருடன் பயின்ற இவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
 ஆசிரிய நிலையில் இதழியல்  ஈடுபாடு
 தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டுத் தம்முடைய வாழ்க்கையை இனமானப் பாதையில் செலுத்தியவர் பேராசிரியர் அவர்கள். தன்மானத் தந்தை பெரியார் அவர்களும் பேராசிரியர்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவராக விளங்கினார். எனவேதான் தந்தை பெரியார் அவர்கள், “யான் வேறு இலக்குவனார் வேறு இல்லை” என்று குறிப்பிட்டார். இருப்பினும் தந்தை பெரியார் அவர்கள் கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று அறிவித்த  பொழுது அதற்கு மாறான நிலையை எடுத்த பேராசிரியர் அவர்கள், இது குறித்த பல வினாக்களைத் திராவிடநாடு இதழுக்கு அனுப்பி  வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வினாக்களையும் அவற்றிற்கான விடைகளையும் தம் இதழில் தொடர்ந்து வெளியிட்டார். இதனால் பேராசிரியர் அவர்களுக்கு இதழுலகில் ஈடுபாடு மேலும் பெருகியது.
நேரடி இதழியல் ஈடுபாட்டிற்கு வித்து
  பேராசிரியர் அவர்களை இதழ்ப்பணியில் நேரடியாக ஈடுபடச் செய்தது நெல்லையில் நடந்த ஒரு சிறு நிகழ்வே ஆகும். திருநெல்வேலியில் ‘வட்டத் தொட்டி’ என்னும் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய சொற்பொழிவாளர் ஒருவர் (திரு. திரிமூர்த்தி) சங்க இலக்கியத்தை வங்கக்கடலில் போட வேண்டும் என்று பேச அங்குக் கூடியிருந்தவர்களும் கைதட்டி வரவேற்றனர் என்ற செய்தியை அறிந்த பேராசிரியர் அவர்கள் உள்ளம் பதைத்து  இவ்வாறு பேசியதும் மக்கள் வரவேற்றதும் மக்களின் குற்றமாகாது; மக்களிடையே சங்க இலக்கியத்தைக் கொண்டு செல்லாத தமிழ்ப் புலவர்களின் குற்றம்தான் எனக் குறிப்பிட்டு மக்களிடையே சங்க இலக்கியத்தை எளிய இலக்கியமாகப் பரப்ப வேண்டும் என்னும் நோக்கோடு  ‘சங்க இலக்கியம்’ என்னும் கிழமை இதழை நடத்தி இதழுலகில் நேரடியாகத் தடம் பதித்தார்.
 நடத்திய இதழ்கள்
 1945 முதல் 1947 வரை நெல்லையில் ‘சங்க இலக்கியம்’ இதழ் நடத்திய பேராசிரியர் அவர்கள் பின் விருதுநகரில் (1952 வரை) ‘இலக்கியம்’ என்னும் இதழை நடத்தினார். பின் தஞ்சாவூரில் (1952) ‘திராவிடக் கூட்டரசு’ என்னும் கிழமை இதழையும்  ‘Dravidian Federation’ என்னும் ஆங்கிலத் திங்களிருமுறை இதழையும் நடத்தினார். இவற்றின் தொடர்ச்சியாகப் புதுக்கோட்டையில்(1954-1955)‘குறள்நெறி’ என்னும் திங்களிதழை நடத்தினார். கால ஆராய்ச்சி குறித்து வேண்டு மென்றே குறைபடவும் பிழைபடவும் எழுதியவர்களுக்கு மறுப்பாகக்  கால வரலாற்று உண்மையை இவ்விதழில் வெளியிட்டுத் தமிழ் இலக்கியங்களின் தொன்மையை நாடறியச் செய்தார். பேராசிரியர் அவர்கள் மதுரையில் வாழ்ந்த பொழுது ‘குறள்நெறி’ (1963-1971) என்னும் திங்களிருமுறை இதழ், ‘குறள்நெறி’(1966) என்னும் நாளிதழ்,  ‘Kuralneri’ (1966) என்னும் ஆங்கிலத் திங்களிருமுறை இதழ் ஆகியவற்றை நடத்தினார். (பேராசிரியர் அவர்கள் சென்னையிலும் ஐதராபாத் திலும் பணியாற்றிய இடைக்காலத்தில்  குறள்நெறி இதழ் அவருடைய மக்களுள் ஒருவரான முனைவர் இலக்குவனார் மறைமலை அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது.)
தமிழை வளப்படுத்துவதற்காக இதழ்ப்பணி
   குறள்நெறியை மக்களிடையே பரப்பவும் தொல்காப்பியத்தின் ஒல்காப் புகழை அறியச் செய்யவும் சங்க இலக்கியங்களை அனைவரும் படிப்பதற்கும் எனக் குறள்நெறி இதழைப் பேராசிரியர் அவர்கள் நடத்தி வந்துள்ளார்கள். அத்துடன் “தமிழ்நாட்டில் தமிழுக்கே முதன்மை;  தமிழில்தான் எல்லாம்” என்ற நிலையை விரைவில் உண்டாக்கவும், தமிழர் பங்குபெற உரிமையுள்ள இடங்களில் எல்லாம் தமிழும் இடம் பெறவும், காலத்துக்கேற்ப, மரபு கெடாது, தமிழை எல்லா வகையாலும் வளப்படுத்தவும் வாழ்தல் என்னும் தம்முடைய குறிக்கோளை மக்களிடையே விதைக்கவும் இதழ்ப் பணியைத் தொடர்ந்தார்.
 இந்தி எதிர்ப்புப் போரின் படைக்கலன்
பேரறிஞர் அண்ணா அவர்கள் வாயிலாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆற்றுப்படுத்திய பேராசிரியர் அவர்கள் குறள்நெறியை இந்தி எதிர்ப்புப் போருக்கான படைக்கலனாக மாற்றினார். இந்தி முதன்மையால் ஏற்படும்  அழிவுகளையும் தமிழ்க்காப்பின் இன்றியமையாமையையும் தாம் வலியுறுத்தியதுடன் நில்லாது இந்தி எதிர்ப்பு பற்றிய கட்டுரைகள்,பாட்டரங்கம் முதலியன மூலம் அறிஞர்கள், புலவர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பாரையும் இதில் ஈடுபடச் செய்தார். “இந்தி எதிர்ப்புப் போரில் யாரேனும் களப்பலியாக வேண்டும் என்றால் முதல் ஆளாகத் தான் இருக்கின்றேன்”எனச் சொல்லித் துணிந்து ஆட்சியாளரின்  இந்தி அடிமைப் போக்கை எதிர்த்தும்  தமிழ் உரிமைக் காப்பிற்காகவும் வாலாயமான அடக்குமுறைச் சட்டத்தின் கீழும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் என இருமுறை சிறை வாழ்க்கையைச் சந்தித்தவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் என்றால் அதற்கு அடிப்படையாய் அமைந்தது  அவரின் இதழ்ப்பணியே யாகும். அதேபோல், இந்தி எதிர்ப்புப்போருக்கான களத்தில் மக்களைக் குறிப்பாக மாணாக்கர்களை ஆயத்தப் படுத்தியதில் பெரும் பங்கு வகித்ததும் பேராசிரியர்  அவர்களின் இதழ்ப்பணியேயாகும்.
படைப்புகளின்  பகுப்பு
  பேராசிரியர் இலக்குவனாரின் இதழ்களில் திருக்குறள், இலக்கியம் தொடர்பான படைப்புகளுடன் அரசியல், வாழ்வியல், நாட்டியல், மொழியியல், அறிவியல், கலைச் சொற் பட்டியல், அன்றாடப் பயன்பாட்டுச் சொற்பட்டியல், நீத்தார் போற்றல், அறிஞர்களைப் போற்றல், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு, மொழி பெயர்ப்புப் படைப்புகள், தொடர்கதை, தொல்காப்பிய விளக்கம், சிறுகதை,திரைப்படத் திறனாய்வு, வாழ்க்கை வரலாற்றுத் தொடர், தமிழ் அமைப்புகளின் செய்திகள் எனப் பலவகைப் படைப்புகளையும் காண முடிகின்ற போது இவ்வறிஞரின் நோக்கம், எல்லாச் செய்திகளையும் எளிய இனிய தமிழில் அளிப்பதே என்பது தெளிவாகின்றது.
ஆசிரிய உரைகளின் வகைமை
  பேராசிரியரின் ஆசிரிய உரைகளை 1.) இலக்கு சார்ந்தவை 2.) தமிழ் உரிமை சார்ந்தவை 3.) தமிழ்நெறி சார்ந்தவை 4.) கூட்டரசில் சமஉரிமை வேண்டுபவை 5.) இந்தி எதிர்ப்பு சார்ந்தவை 6.) கல்வி சார்ந்தவை 7.) இலங்கைத் தமிழர்கள் பற்றியன 8.) நினைவுரைகள் 9.) ஆன்றோர் பற்றியன 10.) கிளர்ச்சிகள் தொடர்பானவை 11.) தேர்தல் முதலிய அரசியல் பற்றியன 12.) பிற என வகைப்படுத்தலாம். தமிழக மக்களின் சிக்கல்களுடன் நில்லாது பிற மாநிலங்கள் பிறநாட்டுச் சிக்கல்கள்குறித்தும் கருத்துகளைப் பதிந்துள்ளார். இவற்றையும் விலைவாசி முதலான பொருளியல் சார்ந்தவற்றையும் ‘பிற’ என்னும் தலைப்பில் அடக்கலாம். பேராசிரியரின் பயிற்சி மொழி தொடர்பான கருத்துகளைக் கல்வி சார்ந்தவை எனக் கூறுவதை விடத் தமிழ் உரிமை சார்ந்தவை என்பதே சரியான பகுப்பாக அமையும். இந்தி எதிர்ப்பை வலியுறுத்துவதன் நோக்கம் கூட்டரசில் தமிழுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும்  என்பதால் இவற்றின் பகுப்பும் மாறுபடும். கூட்டரசில் தமிழுக்கான உரிமை வேண்டுவன எல்லாம் அரசியல் பகுப்பிலும் அடங்கும். கிளர்ச்சிகள் தொடர்பானவை என்பவெல்லாம் பயிலுநர், பணியாற்றுனர் உரிமைகளை வலியுறுத்துவனவே. நினைவுரைகள் என்பன கூட ஆன்றோர் பற்றியனவே. பேராசிரியர்கள் இலக்கு பற்றியனவும் தமிழ் உரிமை சார்ந்தவையாயும் தமிழ் நெறி சார்ந்தவையாயும் உள்ளன. எனவே, இந்த வகையில் தமிழ் நலச்சார்பில் அவரது தலையங்கங்களாகிய ஆசிரியஉரைகளை வகைமைப்படுத்தலாம்.
முழக்கங்களின் வகைகள்
  கட்டுரை, கவிதைப் படைப்புகள் போல் மக்களிடையே தமிழ் உணர்வுகளை விரைவில் தூண்டக் கூடிய சிறப்பினைப் பெற்றவை இவரது இதழ்களில் இடம் பெற்ற தமிழியச் சிந்தனைகளும் தமிழ் முழக்கங்களுமாகும். இவற்றை, 1. பயிற்சி மொழி, ஆட்சி மொழி, அயல்மொழி முதன்மை அகற்றம்,பிழையின்றி எழுதுதல், முதலான மொழி சார்ந்தவை, 2. இனம் சார்ந்தவை, 3. குறள்நெறி சார்ந்தவை, 4. இலக்கியமேற்கோள்கள், 5. பகுத்தறிவு சார்ந்தவை,  6. போர்க்காலத்தில் இடம் பெற்ற ஒருமைப்பாடு சார்ந்தவை, 7. பொதுவானவை, என ஏழு வகையாகப் பகுக்கலாம். இங்ஙனம் பல்வேறு தமிழ் முழக்கங்கள் மூலம் தமிழ் உணர்ச்சியைப் பரப்பிய தலைமை இதழாளராகப் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் திகழ்ந்துள்ளார். தமிழியக்கப் படைப்புகள் ஏற்படுத்திய தமிழ் உரிமை எழுச்சியை இத்தகைய முழக்கங்களும் ஏற்படுத்தி இவரது இதழ்களின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வித்திட்டுள்ளன எனலாம்.
தொலைநோக்குப் பார்வை
  பேராசிரியரின் எழுத்துரைகளுக்குப் பின் இரண்டு தலைமுறைகள் தோன்றி விட்டன. ஆனால், அவர் தெரிவித்துள்ள கருத்துமணிகள் இன்றைக்கும் நமக்கு வேண்டப் படுவனவாகத்தான் உள்ளன. ஒரு புறம் பேராசிரியரின் தொலைநோக்குப் பார்வையை இஃது உணர்த்தினாலும் மறுபுறம் தமிழ்நாட்டின் மாறா அவலங்களையும் உணர்ந்து வருந்த வேண்டியுள்ளது. செந்தமிழ்மொழி எல்லா நிலைகளிலும் ஏற்றம் பெற உழைக்க வேண்டும் என்றார் பேராசிரியர். அவ்வாறு உழைப்போர் யாருமிலர்; அவ்வாறு சிறுபான்மையர் குரல் கொடுத்தாலும் செவிமடுப்பார் இலர்.
தமிழே நம் தேசியமொழி
    தமிழர்கள், “தமிழே நம் தேசியமொழி”  என  உணர்ந்து அவ்வாறே அழைக்க வேண்டும் என்றும்‘வட்டார மொழி’ என அழைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார் பேராசிரியர். ஆனால் கல்வியகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகளால் இந்தியே தேசிய மொழி என்னும் பொய்யான கருத்து வன்மையாகத் திணிக்கப்படுகிறது.
தமிழினத்தை விரும்பா இந்திய அரசு
  இந்திய அரசினர் தமிழ் இனம் என ஒன்று இருப்பதை விரும்பவில்லை என்றும் தமிழர்களின் பண்டைய வரலாற்றை மறைக்கவே செய்வார்கள்  என்றும் கவலைப்பட்டார் பேராசிரியர் அவர்கள். இன்றும் இந்த இழிநிலைதான் தொடருகின்றது. தமிழ்மக்களுடைய உதவிகள் தேவைப்படும் போதெல்லாம்  அவற்றைப் பெறுவதற்காக இந்தியர் என்றும் தமிழ்மக்களுக்கு உதவித் தேவைப்படும் போதெல்லாம்  புறக்கணிப்பதற்காகத் தமிழர் என்றும் இரட்டை அளவுகோலை இந்திய அரசு கொண்டுள்ளது. எனவேதான் அயல்வாழ் இந்தியர் கூட்டம் தமிழ்நாட்டில் நடந்தபொழுதுகூட ஈழத்தமிழர் சிக்கல்களையோ தமிழக மீனவர்கள் சிக்கல்களையோ பேசக்கூடாது; ஏனெனில்  இந்தியர் கூட்டம் என மறுக்கப்பட்டது. தமிழர்கள் இந்தியர் அல்லர் எனில் ஏன் இந்தியா என்னும் அமைப்பில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? என்னும் வினாவிற்கு விடை கூறுவதில்லை.
கல்வி வழங்கல் பொறுப்பு அரசையே சாரும்
  தேர்வுக்காக ஆயத்தம் செய்வதே கல்விநிலையங்களின் கடமை என்பது மாற வேண்டும் என வலியுறுத்தி வந்தார் பேராசிரியர். ஆனால் படிப்பது என்பதே பணியாற்றத்தான் என்னும் போக்கே இன்னும் மேலோங்கியே காணப்படுகிறது. கலைக்கூடங்கள் கொலைக்கூடங்களாக உள்ளமையால்,அரசே கல்விச் செல்வத்தை வழங்க வேண்டும் என்றும் பேராசிரியர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அரசின் செயல்பாடு என்பது கல்விக்கூடக் கொள்ளையர்களை உருவாக்குவதாகத்தான் உள்ளதே தவிர நேரடியாகக் கல்வித் தொண்டில் ஈடுபட்டு உயர்கல்வி வரை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்னும் கடப்பாட்டை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஒருமைப்பாடு தமிழ் வரலாற்றைப் புதைக்கவா?
    தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித்தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுவதையும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த இழிநிலை இன்னும் தொடர்வதால்தான், தமிழகப் பகுதிகளைப் பிறருக்குக் கொடுத்தது போல், தமிழ் உறவுகளை இழந்தும்,வஞ்சகர்கள் தமிழ் நிலத்தைப் புதைகாடாகவும் எரிகாடாகவும் ஆக்கியும் வாய்மூடி அமைதி காக்கின்றோம்.
தாக்கப்படும் தமிழர்களுக்காகக்  குரல்  கொடுக்கும்  மத்திய அரசு இல்லை
    “வசதியற்றவர்களாய் ஈழத்திலும் காழகத்திலும் சிங்கப்பூரிலும் இன்னும் பிற நாடுகளிலும் கூலிகளாய்த் துன்பம் சுமந்து வாழும் தமிழர் அங்கெல்லாம் வெறி வேங்கைகளால் தாக்கப்படும்போது ஏன்? என்று கேட்க எவரும் இல்லை. நாடற்றவர்களாக விரட்டப்படுகின்றனர். நடுக்கடலில் தத்தளிக்கின்றனர் சிலர். தாய்நாட்டில் நுழைந்துவிட்ட காரணத்தால் பிச்சைக்கக்காரர்களாக ஆக்கப்பட்டு விட்டனர் பலர்” எனப் பெரிதும் வருந்தி பேரிடர்க்கான விழிப்பு மணியை – அபாய மணியை – அன்றே பேராசிரியர்   ஒலிக்கச் செய்தும் கேளாச் செவியினராகவே நாம் இன்னும் இருக்கின்றோம்.
இலங்கையரசின் நட்பிற்குத் தமிழர்களைப் பலிகொடுக்கும் இந்தியா
    இந்திய அரசு இலங்கையரசின் நட்புக்காகத் தமிழர்களைப்  பலி கொடுத்து விடுவார்களோ என்று தம் அச்சத்தை அன்றே பேராசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். எவ்வளவு பெரிய வருந்தத்தக்க உண்மை என்பது நாளும் தமிழ் மீனவர்களையும் நூறாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களையும் பறிகொடுத்தும் நம்மில் பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பெரிதும் வேதனையாக உள்ளது.
தேசிய மொழிகளுக்குச் சமஉரிமை
    ஆங்கிலத்தை அகற்றப் போராடிக் கொண்டிருக்கும் நம் மீது இந்தி மொழியைத் திணிப்பதையும் இந்திக்கு மட்டும் முதன்மை என்பது அதன் செல்வாக்கிற்கும் பிற மொழிகளின் வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதையும் அனைத்துத் தேசிய மொழி களுக்கும் சம உரிமை அளிப்பதே கூட்டரசை நிலைக்கச் செய்யும் என்பதையும் பல இடங்களில் பேராசிரியர் வலியுறுத்தி வந்துள்ளார். இருப்பினும் இந்தியின் முதன்மை என்பது நாளும் மத்திய அரசால் புகுத்தப்படுவதாகவும் நம் தேசிய மொழிகளும் தேசிய இனங்களும் மறக்கடிக்கப்படுவனவாகவும்தான் இன்றுவரை உள்ளன.
சாதிக்கட்சிகளைத்தடைசெய்!
   தமிழரல்லாதவர்களால் புகுத்தப்பட்ட சாதியை அறவே அகற்றவும் சாதிக்கட்சிகளைத் தடைசெய்யவும் பேராசிரியர் கூறும் அறிவுரைகள் இன்றும் பயன்படுத்தத்தக்கனவே.
மன்பதை நோய்க்கு மருந்து மாணவர் கிளர்ச்சி
   நோய்க்கு மருந்தேபோல் மன்பதை நோய்க்கு மாணவர் கிளர்ச்சியும் வேண்டப்படுவது எனப் பேராசிரியர் கூறியுள்ளது,  போராட்டங்களையே நடைமுறை வாழ்க்கையாகக் கொண்டவர் உட்பட,இதுவரை வேறு யாரும் கூறாதது. இந்தி நோயைப் போக்க மாணவர்களைக் களத்தில் இறக்கிய பேராசிரியர் கருத்து இவ்வாறுதானே இருக்க இயலும்! கிளர்ச்சிகளை வன்முறையால் அடக்காமல் அவற்றிற்கான காரணங்களை அறிந்து போக்க வேண்டும் எனவும் மென்முறையால் அகற்ற வேண்டும் எனவும் பேராசிரியர் தெரிவிக்கும் நல்லுரைகளைப் பின்பற்றினால் ஆட்சி என்பது என்றும் நல்லரசாகவே திகழும் அன்றோ!
தமிழ் காக்கும் ஆசிரிய உரைகள்
    தேவநாகரி எழுத்துகளை அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தினால் ஏற்படும் பேரழிவு,கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடு, சங்கங்கள், பல கட்சிமுறை வேண்டாமை, தேர்தல், குடியாட்சி,தமிழ்க்காப்பு எனப்பல வகை குறித்தும் பேராசிரியர் ஆசிரிய உரை எழுதியுள்ளார். இவையாவும் இன்றைக்கும் நாம் பின்பற்றப்படவேண்டியனவே.
முழு உரிமையுடைய தமிழக அரசே தேவை!
    “தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும்நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும்” என்றும் “முழு உரிமையுடன் கூடிய தமிழக அரசைப் பெறவேண்டும்” என்றும் “மக்கள் நன்மைகளுக்கான மக்களால் ஆளப்படும் மக்களாட்சியே வேண்டும்” என்றும் பேராசிரியர் வலியுறுத்துவதை இன்றேனும் நாம் உணர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
மக்களுக்காக மொழி; மொழி காக்க மக்கள்!
  பேராசிரியர் இலக்குவனார் அவர்கள் எத்தனை இதழ்கள் நடத்தியிருப்பினும் அவற்றின் அடிப்படை நோக்கம் தமிழ் நலமேயாகும். ‘மக்களுக்காக மொழி; மொழி காக்க மக்கள்’ என்னும் வாழ்வியல் உண்மையை உரைக்கும் பேராசிரியர் மக்கள் நல்வாழ்விற்காக மொழி நலத்தை வலியுறுத்தியதுடன் பிற எல்லாக் குறைகளையும் அகற்ற வேண்டியதன் இன்றியமையாமையையும் வலியுறுத்தியுள்ளார்.
இதழியல் வல்லுநர்களை உருவாக்கிய பெருமை
  உயர் ஊதியம் பெற்று வந்த பேராசிரியர், அதனைக் கொண்டு தம்மையும் தம் குடும்பத்தையும் உயர்த்தினால் போதும்  என ஒருபோதும் எண்ணியதில்லை. தமிழையும் தமிழரையும் தமிழ் உலகையும் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயல்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் உறுதுயரையும் பொருட்படுத்தாமல் உழைத்தார்! உழைத்தார்! உழைத்துக்கொண்டே இருந்தார்! உயர்கல்வி எய்திய புலவர் என ஒதுங்காமல் மக்களுக்கான மக்கள் தலைவர் என்ற நிலையில் மக்களோடு மக்களாகக் களப்  பணிகளில் ஈடுபட்டார். அதற்குப்  பெரிதும் துணை நிற்கும் கருவியாக இதழ்ப்பணியை அமைத்துக்கொண்டார். இனிய எளிய தமிழில் திங்களிதழ்கள், கிழமை  இதழ்கள், இலக்கிய இதழ்கள் மட்டுமல்லாமல் நாளிதழும் நடத்த  முடியும் என நடத்திக் காண்பித்தார். அவரது இதழ்களில் பணியாற்றியவர்கள் பின்னர் பல்வேறு இதழ்களிலும் பணியாற்றும்  வாய்ப்பைப் பெற்றனர். இதழியல் வல்லுநர்களை உருவாக்கிய இத்தகு  பெருமை இதழியல் தந்தை ஆதித்தனார் அவர்களுக்கும் இதழியல் செம்மல் இலக்குவனார் அவர்களுக்கும் மட்டுமே உரித்தானது ஆகும்.
இதழியல் செம்மல்
  இதழ்கள் செய்திகளைத் தருவதற்கும் பொழுதுபோக்காக வாசிப்பதற்கும் மட்டுமல்ல ;  மக்களை நாட்டு அவலங்களுக்கு எதிராக மெருகேற்றும்  ஆயுதங்களாகவும் விளங்க வேண்டும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் இதழியல் செம்மல் தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார்.
இதழியல் செம்மல் இலக்குவனார் வழிநின்று இன்தமிழ் காப்போம்!
++++++

03.09.2013 – பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவுநாளாகும்.

News

Read Previous

தமிழ்நாட்டின் போக்குவரத்திற்கு உண்டான பதிவு தொடர் எண்கள்….

Read Next

முதுகுளத்தூர் மெட்ஸ் பள்ளி தாளாளர் எஸ். கமால் நாசர் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.