தியாகமே ஹிஜ்ரத்

Vinkmag ad

 

(முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)

 

ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி

அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி

தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத்

தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !

 

தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல்

தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து

எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் !

இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !

 

மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து

மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு

முக்காலம் விளைகின்ற வாழையடி வாழையென

முப்போகம் விளைவிக்கச் சென்றதுதான் ஹிஜ்ரத்தாம் !

 

பக்கத்துத் தாயிபிலே போட்டவிதை முளைக்கவில்லை !

பாவிகளின் நெஞ்சுக்குப் பாய்ச்சிய நீர் சேரவில்லை !

விக்கித்துப் போகாமல் வேதனையில் வாடாமல்

வேகமுள்ள ஹிஜ்ரத்தால் விவசாயம் செய்தனரே !

 

மரம் வெட்டிப் போட்டாலும் சமையலுக்கு விறகாகும் !

மெழுகுதனை எரித்தாலும் மேலுருகி வெளிச்சந்தரும் !

தரைபோட்டுத் தேய்த்தாலும் சந்தனமோ வாசந்தரும் !

திருநபிக்குத் தரும்துன்பம் திரும்பினாலும் இன்பந்தரும் !

 

விரல் பறித்த மலர் கூட வஞ்சமின்றி வாசந்தரும் !

வெட்டியமண் விழிதிறந்து ஊற்றெடுத்து நீரைத்தரும் !

தரங்கெட்டு ஊர் துறக்க வைத்தவரின் வாழ்வுக்கோ

தாஹா ரசூல் ஹிஜ்ரத்தோ தண்டனையாய் அன்பைத்தரும் !!

 

தாய்மைக்குத் தத்துவமே தன்சேயைச் சுமப்பதுதான் !

தங்கத்தின் இலக்கணமோ தான்வெந்து ஒளிர்வதுதான் !

தூயநபி வரலாறோ துயர்வென்று நிலைப்பதுதான் !

தூய ஹிஜ்ரத் தீனைத்துளிர் விடச் செய்வதுதான் !

 

சேய்செய்யும் பிழைக்காகப் பெற்றமனம் அழுவதுபோல்

சிந்திக்க வழிதெரியா சிறுமனத்தார் பாவங்களை

தான் மனதால் மன்னித்து, தன் மனதால் நேசித்து

தீன்மனதால் ஒன்றிணைந்த தியாகமதே ஹிஜ்ரத்தாம்.

 

News

Read Previous

முதுகுளத்தூர் தாலுகாவில் 2 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை மூன்று மாதமாக நிறுத்தம் முதியோர் கடும் அவதி

Read Next

கவிதையில் வாழுகின்றாய் !

Leave a Reply

Your email address will not be published.